Wednesday, March 29, 2006

7. வடிவேலிறைதாள் நினைவாய்

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7


//கெடுவாய் மனனை கதிகேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்//
தினந்தோறும் வயசு ஏறுகிறது நமக்கு. வயசு மட்டும் ஏறி நின்றால் பரவாயில்லியே. நாம் தினமும் பார்க்கும் உலக விஷயங்களாலும், அடுத்தவரின் நடத்தைகளாலும், நம் எண்ணங்களாலும் என்று பல வழிகளில் நம் மனசை கல்லாக்கி மாசுபடுத்திக்கொள்கிறோம். போன பாடலில், அவனை நினைத்தால் போதுமே, அவன் பாதத்தாமரைகள் நம் மனதில் ஒளிவீசுமே என்று சொன்னவுடன் அது மிகவும் எளிமையானது என்கிற மாதிரி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். அது எளிமையானதுதான், நம் மனம் மும்மலங்களினாலும் அழுக்காய் கல்லாய் ஆகாமல் போயிருந்தால். கல்லின் மேல் தானாய் தாமரைப் பூக்கும் என்று சொன்னாயே, என்றால் அதுவும் உண்மை தான். ஆனால் அவனை நினைக்க வேண்டுமே. அதுகூட ஒரு நொடி செய்ய மாட்டேனென்றல்லவா நம் மனமும், எண்ணமும் எப்பொழுதும் வேறெங்காவது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கடிவாளம் போடவேண்டாமா. அதனாலேயே தம் (நம்) மனதிற்கு ஆர்டர் போடுகிறார் அருணகிரி.

கெட்டுப்போய்க்கொண்டிருக்கிற மனமே! கதி கேள்! இதை விட்டால் நீ உய்வதற்கு வழி கிடையாது. இதைச் செய்து நற்கதி அடைவாய்.

1. கரவாது இடுவாய் - ஈயென்று உன்னிடம் வந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதிடு. இது என்ன சம்பந்தமே இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால் மாதிரி லெக்சரெல்லாம் அருணகிரி அளிக்கிறாரென்று நினைக்க வேண்டாம். இதற்கும் பொருள் இருக்கிறது. காசிக்கு போனால் நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை விடுவோம், அல்லவா? (நானும் அப்ப காசிக்குப் போய் படிப்ப விட்டுடவான்னு கேட்டு பதிலுக்கு ஒரு 'இப்படியும் ஒரு அசடா' லுக் வாங்கிருக்கேன் ஸ்கூல் காலத்துல).

காசிக்கு போய் விடுவதற்கு உண்மையில் பொருள் என்ன? நமக்குப் பிடித்ததை விடுகிறோம் என்றால் பகவானுக்குக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக நாம் அதுவரை ஒன்றின் மேல் இருந்த பற்றை விடுகிறோம் என்று அர்த்தம். இவ்வுலக விஷயங்களில் பற்றைவிடுவது மிகவும் அவசியமானதல்லவா? அதேபோல, ஒருவர் கேட்கும் பொருளை தானமாய்க் கொடுப்பதன் மூலம் அப்பொருளுடனான நமக்கிருந்த பற்றெனும் தளை அறுபட்டுப் போகின்றது. இதனால் நமக்கும் நன்மையே உண்டாகிறது. இந்தக் காரணத்தாலேயே நம் பெரியோர்கள் ஈதல் பற்றி அவ்வளவு சிலாகித்து சொல்லியிருக்கின்றனர்.

2. வடிவேலிறைதாள் நினைவாய் - இறைவனை நினையாது கொடுத்தால், நாம் கொடுக்கிறோம் என்று நினைக்கத்தோன்றும். அது அகம்பாவம். எதுவுமே நம்முடையதில்லை என்று உணர்ந்து நாம் என்னும் அகம்பாவம் - அதை விட்டொழிக்க எந்நேரமும் வடிவேலனின் இறைதாள்களை நினைப்பாய்.


//சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.//

மெய்யடியார்க்கு தீவினைகள் அறவே வராது என்று

காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே!
சிதம்பரத்தில் உறைபவன் மீது காதல் கொண்டு அவன் செவ்வடிகளை எந்நேரமும் கைதொழும் அடியாரிடம் வினைகள் அண்டாது என்று சம்பந்தப் பெருமான் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதரும் இப்படி மேற்கூறியதைச் செய்தால் நெடுவேதனை - பிறப்பும் இறப்பும் இவ்வுலகவாழ்க்கையும் - இவற்றால் நம் ஆன்மா படும் நீண்ட வேதனையும் - தன்னை சுட்டெரிப்பாய். இதற்கு கந்தர் அலங்காரத்தில் இன்னும் அழகாக, நான்முகனுக்கே சவால் விடுகிறார் அருணகிரியார்.

பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் ...
என்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே


பிரம்மாவே(பங்கேருகன்)! கேள்! என் தலையெழுத்தை எழுத வேண்டுமென்று நீ நினைத்து, அதை என் கோவலனான முருகன் அறிந்தான் என்றால், உன் காலில் முற்சமயம் ஒரு விலங்கு போட்டவன் இப்போது இரண்டாவது விலங்கும் போடுவான்!

அப்படி குமரன் தாள்கள் பணியும் அடியார்களிடம் பிரம்மனும் கூட விளையாட முடியாது என்கிற போது வினைகள் எம்மாத்திரம்?

இங்கே அடுத்து வரும் 'விடுவாய் விடுவாய் வினையாவையுமே' கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது - வினைகள் இரண்டுவகை. நல்வினை தீவினை. தீவினை விட வேண்டும் சரி. ஏன் நல்வினையும் விட வேண்டும்? நல்வினையை விடக்கூடாது. ஆனால் அவற்றால் பயன் வருமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்கிறார். கண்ணன் கீதையில் சொன்ன கர்ம யோகமும் இதுதான். பலனை எதிர்ப்பார்க்காமல் உன் வேலையைச் செய். வேதனைகள் தானாகவே தூளாகும் இறைவனின் அருளால்.


---
கெட்டுக்கொண்டிருக்கும் மனமே! உய்ய வழி கேள்! இல்லையென சொல்லாமல் ஈதிடுவாய்! எந்நேரமும் குமரன் தாள் நினைவாய்! அதைச் செய்தால் உன்னை அண்ட வரும் வினைகள் யாவும் தூளாய் போகும்.

Monday, March 27, 2006

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமோ?

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமா?

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6


//திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ//
திணியான மனோசிலை - நம்மனசை மிகவும் உறுதியான கனமான கல்லென்று சொல்லிதான் அநுபூதியையே ஆரம்பித்தார் அருணகிரி சுவாமிகள். நெஞ்சக்கன கல்லுஞ் நினைவுக்கு வருகிறதா? ஏன் கல்லென்று சொன்னார்னு அந்தப் பதிவுலேயே (கடவுள் வாழ்த்து (காப்பு)) பாத்துட்டோம். அதனால் சுருக்கமாக.. சிலை என்றால் கல். சிலையை வடிக்கக் கற்கள் தானே பயன்படுத்தறோம். திடமாக இருக்கும் உறுதியான கல் போன்று இருக்கிறது நம் மனம்.

இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா? நாம இருந்தா என்ன செய்வோம்? அந்த மாதிரி குட்டிக்கல்லையெல்லாம் பொறுக்கி பாதைக்கு வெளிய, யார் கால்லேயும் படாத மாதிரி தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலையப் பாக்கப்போய்டுவோம்.

இரண்டாவது பக்தி வழி. முருகன நினச்சா, அவனே நமக்கு பொற்கொல்லன். அருணகிரியவே அவன் செதுக்கி வெறும் கல்லை ரத்தினமாக்கலையா? அதுவே தான். வைரம் கிடைக்கும் போது வெறும் கல்லாதான் கிடைக்கும். எடுத்துத் தூக்கிப்போட்டுடுவோம். அதுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆனா சுத்திகரிச்சு பட்டை தீட்டினா அத வெறும் கல்னு புறந்தள்ள முடியுமா? நம்மள நாமே பட்டை தீட்டிக்கறதுதான் பக்தி. அந்தப் பக்தியை நமக்கு தரவனும், அதன் பயனான அருளைத் தருபவனும் கந்தனே. அவன் தான் நமக்கு சிற்பி, பொற்கொல்லன் எப்படி வேணா வச்சுக்கோங்க. அப்படி வைரமான நாம் அப்புறம் என்னாவோம்? அவனுக்கே அணிகலனாவோம். இங்கே அணிகலனால் அவனுக்கு சிறப்பு கிடையாது. ஆனால், அவனால் நமக்கு முக்தி. அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.

இதுவே அபிராமி பட்டர் கொஞ்சம் வேற மாதிரி

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

னு பாடியிருக்கார். என்னதான் புதுவீட்டுக்கு போனாலும், நாம பிறந்து வளர்ந்த பழைய சொந்த வீடு மாதிரி வருமா? அந்த மாதிரி அபிராமியே வந்து பட்டரின் மனசை அவளோட பழைய வீடு மாதிரி நினைச்சு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.

அதையே தான் இங்கே அருணகிரிநாதர் 'உன் பொற்பாதங்களையே நினைந்துருகும் அடியார்களின் மனதில் தாமரைபோல நீ மலர்வதில் ஆச்சரியமும் உண்டோ?னு கேக்கறார்.

நாம் குமரனின் பொற்பாதங்களை பணிகிறோம். அவனுக்கும் ஒரு மேலிடம் இருக்கணுமே. கால்ல விழ. அவன் யார் கால்ல விழுகிறான்னு கேள்வி.
//பணி யாவென வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே//
நம்ம 'அம்மா' கால்ல மந்திரிங்க விழற போட்டோக்கள பாத்துருக்கீங்களா? அவங்க பார்வையே ஆயிரம் கவித சொல்லும். பயபக்தியா சாஷ்டாங்கமா விழுந்து எழுந்து, பவ்யமா கையக்கட்டிகிட்டு 'நீங்க சொல்லுங்க, என்ன செய்யட்டும்'னு லுக் விடுவாங்க. அம்மா என்ன நினைக்கறாங்களோ, நாம அதச் சரியா செய்யணுமே அப்டி இப்டினு அவங்க மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடிகிட்டுருக்கும். அதுமாதிரி முருகனுக்கு சுப்ரீம் கோர்ட் வள்ளி தானே? அதான் அவ கால்ல விழறச்சேயே நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லும்மான்னு ஆசையா கேட்கிறான் கந்தன். ஏன் இப்படி? பின்ன மனைவி சொல்றத கேக்கலேனா எப்படி. இராத்திரிக்கு தினைமாவு கிடைக்காதே. மேலோகத்துலேர்ந்து பாதாள லோகம் வரை அம்மாக்களோட பவர் பாயுது. இல்லியா? ஏன்னா, வள்ளி மேல அவ்ளோ அன்பு. தணியாத அன்பு. அன்பைக் காட்டறதுல எப்படிப் பட்டவன்? தயாபரன். கருணையே வடிவானவன்.

வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ?

Tuesday, March 07, 2006

5. சகமாயையுள் நின்று தயங்குவதேன்?

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

இதுவும் போன பாட்டோட தொடர்ச்சியாக கொள்ளலாம். அந்தப் பதிவில் மாயையினால் பந்தத்திலும் பாசத்திலும் மட்டுமே பற்று வைப்போருக்கு இறைவனடி நினைய தடையாக இருப்பதாய் பார்த்தோம். அதற்கு ஜெயஸ்ரீ அவர்களும் தி.இரா.ச அவர்களும் மேல் விளக்கங்கள் கொடுத்திருந்தனர். அதுவே இந்தப் பாட்டிலும்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
மகமாயைன்னா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மயக்கும் மாயைன்னு அர்த்தம். அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது. இதையே தான் சில தினங்களுக்கு முன் (2. எனையிழந்த நலஞ்சொல்லாய்) பதிவில் பார்த்தோம், நினைவுக்கு வருகிறதா? இறைவன் தன்னைக் குறுக்கிக் கொண்டு சிலைகளாக நம் புறக்கண்களுக்கும், பின்னர் நமக்கு உண்மையான அன்பு அவன் மேல் வருகையில் பரம்பொருளாய் நம் அகக்கண்ணுக்கும் காட்சி தருகிறான். ஆனால், அம்மாதிரி அவனை புறக்கண்களால் காண்பது எளிது. கோயிலுக்கு போனால் பார்க்கலாம். ஆனால் அப்போதும் அவனைப் பார்க்காமல் காஸ் அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்று மனம் அலைபாயும். இத்தனைக்கும் அர்ச்சகர் மணியெல்லாம் அடித்து, கற்பூரம் எல்லாம் காட்டி எப்படியாவது நம் attention-ஐ இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அப்படி கண்முன்னே நிற்கும் கடவுளின் உருவத்தைப் பார்த்தாலும், அவனை உண்மையாக பார்க்க முடிவதில்லை. கண்முன்னே தெரியும் தெய்வத்தை காண்பதற்கே இவ்வளவு தடைகள் என்றால் அகக்கண்ணால் காணவேண்டிய தெய்வத்தைக் காண குறுக்கே எத்தனை விஷயங்கள் இருக்கும்? இதையே தான், கந்தர் அலங்காரத்தில்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ள்வாய்


என்று சொல்கிறார். இருபுறமும் பற்றி எரியும் மூங்கில் கிளையின் நடுவில் சிக்கிய எறும்பதனைப் போல் இங்கும் மகிழ்ச்சியில்லாமல், உய்யவும் வழியில்லாமல் தவிக்கும் என்னுடைய துயரை அழித்தருளாயோ என்று. அதுபோல நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள். பற்றுகள். தளைகள். அப்படி இவ்வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு, எறும்பின் உய்விற்கு தடையாய் இருக்கும் நெருப்பைப் போல், தடையாய் இருப்பதில் முக்கியமானது மாயை. அதனூடாக பாசம், பந்தம் ஆகிய பற்றுகள். இப்படிப்பட்ட உலக மாயைகளை நொடிப்பொழுதில் களைந்திட வல்லவனான எம்பிரான்...

முகமாறு மொழிந்து மொழிந் திலனே
முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் இன்னும் இந்த மகத்தான மாயையினை ஒழித்தழிக்க இயலாமல் தவிக்கிறேனே.

அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் பெண்டிர். போன பதிவில் சொன்ன படியே இவற்றின் மேல் கொண்ட பற்றைப் பற்றியே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இவற்றின் மேல் கொள்ளும் பற்று எத்தகையானது? அயர்ச்சி தரக்கூடியது. அவ்வயர்ச்சியினால் என்ன தீமை விளைகிறது? புறக்கண்ணாலும், அகக்கண்ணாலும் இறைவனைக் காண முடியாத அளவுக்கு மன அயர்ச்சியும், உடல் அயர்ச்சியும் தரக்கூடியது இந்த பற்றுகள் எனப்படும் அடிமைத்தளைகள். இந்த அடிமைத்தளைகளே நாம் இந்த உலகத்தின் மாயையினில் சிக்கித் திண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே!

இராகவனின் பதிவு

Wednesday, March 01, 2006

4. தளைபட் டழியத் தகுமோ?

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூர் ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)

அநுபூதிக்கு திருப்புகழ், அலங்காரம் இவற்றைவிடவும் சிறப்பு உண்டு. அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றென்றும் சொல்லுவோர் உண்டு. ஏனென்றால் சிக்கலில்லாத, எளிமையான பாக்களின் மூலம் மெய்ப்பொருள் தத்துவத்தையே வெறும் ஐம்பத்தியொரு பாக்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரி. இவை ஒரே சமயத்தில் ஒரு நூலாக எழுதப்பட்டதில்லை. மாறாக பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்டவை இந்தப் பாடல்கள். சரி இந்த அருமையான பாடலுக்கும் பொருள் பார்ப்போமா?

//கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே//
முருகப் பெருமான் சூரபத்மனை கொன்ற கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு சின்ன recap பார்ப்போமா? சூரபத்மன் தோல்வியின் விளிம்பில் ஒரு மாமரத்தின் வடிவம் எடுத்தான். பல கிளைகள் விட்டு பரந்து வளர்ந்து மரத்தின் வடிவில் இருந்த சூரனையும்.. கிரியும் - இது க்ரௌஞ்சனைக் குறிக்கும். க்ரௌஞ்சன் என்பவன் சூரனின் தளபதிகளில் ஒருவன். அவன் மலை உருவத்தில் நின்றான். இந்த இரண்டு பேரையும் துளை விழும் அளவிற்கு வேலால் அடிக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. முருகனின் வேல் அவர்களின் மேல் பட்டவுடனேயே அவர்கள் அழிந்தார்கள்.

இப்படியும் எடுத்துக்கலாம். கிளைன்னா உறவுகள் னும் ஒரு பொருள் வரும். தாரகன், சிம்மமுகன் என்று இரு சகோதரர்களுடன் வந்த சூரபத்மனையும்..

கடைசியா.. இதுதான் இவ்வரிகளுக்கு உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது? அவனை நினைத்தாலே மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட வேலை உடைய வேலாயுதனே...

இப்போது புரிகிறதா? ஏன் அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றாக கருதுகிறோம் என்று. மேலோட்டமாக படிப்போருக்கும் பொருள் புரியும். அதுவும் நல்ல பொருள் தான். கொஞ்சம் படித்தோருக்கு இன்னும் தத்துவார்த்தமான பொருளும் உள்ளே அடங்கியிருக்கும். யாருக்கு என்ன லெவலோ அந்த அளவிலேயே, மெய்ப்பொருளை விளக்குபவர் அருணகிரிநாதர்.

//வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ//
இது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கறதுக்கு.

வளைகள் நிறைய அணிந்த கைகளை உடைய மாது (மனைவி) மற்றும் மக்கள் - நம் குழந்தைகள். பெண்ணீயவாதிகள்லாம் அடிக்க வரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இதே வரியை 'தாலிகட்டு கையுடை பதியும்'னு இதைப் படிக்கும் பெண்கள் மாத்திக்கலாம். முக்கியம் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகள் இல்லை. பந்தம், பாசம் போன்ற தளைகள் தான். இராகவன் சொன்னது போலவே அடிமைத்தளையை நினைவில் வைத்துக்கொள்வோம். பெண்களோ, குழந்தைகளோ, திருமணம் செய்வதோ பிரச்சனையா? திருமணம் தான் பிரச்சனைன்னா முருகனைப் பாடிய நம் தமிழ் முன்னோர்கள் அதை இன்னமும் சடங்காக வைத்திருப்பார்களா? க்ருஹஸ்தர்களுக்கென்று முக்கியமான இடமும் வடமொழியை முக்கியமாக உடைய சமயங்களிலும் சொல்லிருக்கிறார்கள். case in point: சீதையின் தந்தை சீரத்துவஜ ஜனகன்.

மேலும், வாரியாரின் சொற்படி இறைவன் நமக்கு ஆசிரியனாக இருக்கவே மீனாஷியை மணம் புரிந்தான். ஏன்? விரல்விட்டு எண்ணுவது குழந்தைகளுக்கு எளிது. அதனால் ஆசிரியரும் விரல்விட்டு எண்ணிக்காண்பிப்பார். அதற்காக ஆசிரியருக்கும் விரல் விட்டு எண்ணினால் தான் இரண்டும் இரண்டும் எவ்வளவென்று தெரியும் என்று சொல்லமுடியுமா? அப்படியே முருகனும் வள்ளியையும், தெய்வானையும் மணந்தான். அப்படி அவனே மணவாளனாய் இருக்கையில் திருமணம் வேண்டாமென்று சொல்ல முடியுமா?

பிறகு ஏன் இப்படி அருணகிரி சொல்லுகிறார்? காரணம் இருக்கிறதே. மனைவியும் மக்களும் முக்கியந்தான். இதை கல்யாணமவர்களும் ஏன் ஆகாதவர்களும் உங்களில் புரிந்திருப்பீர்கள். கோயிலுக்கு போனால் கூட தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ, நம் மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பானா, மகன் தவறான வழியில் போகாமல் இருப்பானா, நம் மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா, அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா? முக்கியம் தான். ஆனால் அவைகளை விட முக்கியம் இறைவன். இப்படியாக இந்த உலகச் சழக்கைகளில் (materialistic என்றும் கொள்ளலாம்) சிக்கித் இறைவனை நினையாமல் இவற்றில் மட்டுமே அடிமையாக இருந்துவிடும் நிலை தகுமா? ஏன் தகுமோ தகுமோ என்று இருமுறை கேட்கிறார்? ஏனென்றால், கூப்பிடாமலேயே ஓடிவந்து அருளும் கருணைக்கடலான கந்தனை நினைந்தும் நான் இன்னும் விமோசனம் பெறாமல் இந்த அடிமைச் சங்கிலிகளில் சிக்கி சுழல்வது நியாயமா முருகா? இது உனக்கே அடுக்குமோ? இப்படி நான் இருப்பது உனக்குத்தானே இழுக்கு என்று emphasize செய்கிறார் அருணகிரியார்.