Friday, January 19, 2007

14. மெய்யா பொய்யா?

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவா யொழிவாய்!
மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே! (14)

//ஒழிவா யொழிவாய்! மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழிசெல்லும் அவாவினையே!//

இந்திரியங்கள் நமக்கு ஐந்து. அவை கண், காது, மூக்கு, வாய், உடல்.

உடல் என்பது இங்கே பிரதானம். அதைச் சார்ந்து மற்ற நான்கும் இருக்கின்றன. இப்போது சற்றே உடல் என்பது என்ன என்று பார்ப்போம். நம் ஆன்மா பிறவியெடுக்க ஒரு சாதனமாய் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகள் மட்டுமே இருந்து அழுகும் ஒரு ஜடப்பொருள். இது இப்படியிருக்க உடலுக்கு நாம் வைத்திருக்கும் மற்றொரு பெயர்? மெய். நகைமுரணாக இல்லை? மெய் என்றால் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது, அசையாதது, மாறாதது என்று பொருள். ஆனால் தோன்றி மறையும் ஒரு தேகத்திற்கு மெய் என்று பெயர் கொடுத்து கொண்டாடுவதிலிருந்தே அடிப்படையிலேயே கோணல் இருப்பது தெளிவாகிறதல்லவா? நிலையற்ற ஒரு வஸ்துவை நிலையானது, மெய்யானது என்று புகழ்வது அறிவார்ந்த செயலா?

மனித உடல் என்பது ஒரு மோட்டார் காரைப் போன்றது. பாகங்கள் நிறைந்தது. பழுதடையக்கூடியது. அழியக்கூடியது. இயங்க சக்தி தேவைப்படுவது. இப்படி பல பலவீனங்களைக் கொண்ட உடல் எப்படி மெய்யானதாக முடியும்? முன்னோர்கள் முட்டாள்களா என்ன? வெள்ளைத்துணியில் கரும்புள்ளியைப் போல இப்படி பளிச்சென்று ஒரு தவறைச் செய்தால் அது நம் கண்களில் படாமல் போய்விடாது என்று புரிந்துதான் செய்துள்ளார்கள். உடல் மெய்யல்ல என்பது - மெய் என்றால் என்ன, உடல் என்றால் என்ன என்று இம்மாதிரி ரெண்டு நிமிடம் சிந்தித்தாலே புரிந்துவிடும். பிறவாதிறவா இறைவனை மெய்ப்பொருள் யாதென கேட்க நினைக்கையில் பொய்யான இவ்வுடலை மெய்யென நினைந்து பலகாலம் திரிந்த காலமும் நினைவிற்கு வருமல்லவா? அப்படி வருகையிலேதான் அருணகிரி இங்கே சொல்கிறார்...

வாழ்க்கையில் துணையாய் இருக்கவேண்டிய இந்திரியங்கள் என்பது போய் இந்திரிய சுகத்திற்கென வாழ்வதே மெய்யெனும் பொய்யில் களித்து நிற்கவைப்பது ஆசையெனும் பேய். இப்பேய் துன்பத்திற்கெல்லாம் மூலாதாரம். இப்பேய் வெளிப்படுவது இந்திரியங்களின் மூலமாக. பெண், பொன், மண் என்று மூவாசைகள் தவிர இப்போது எதன்மேல் தான் ஆசைவைப்பது என்று தெரியாமல் தவிக்கும் அளவுக்கு நம்மை இந்திரியங்கள் ஆட்டிப்படைக்கின்றன. இதற்கு என்ன தீர்வு? எப்படி போக்குவது?

//கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே//
மெய்யறிவெனும் கதிர்முத்தி நினைத்தோர்க்கு முக்தியளிக்க காத்திருக்கும் ஞானவேலை தன் கையில் உடைய வேலவனின் செம்மையான பாதக்கழல்களை நினைந்து நினைந்து உய்திடுவாய் மனமே! அவற்றையே நினைத்து ஜபிப்பதன் மூலம் ஐந்து இந்திரியங்களின் வழியாக வெளிப்பட்டு நம் வாழ்வைப் பாழாக்கும் ஆசையை ஒழித்துக்கட்டுவாய்! என்று சுவாமிகள் ஆசைப்பிணியிலிருந்து விடுபெற முருகனின் பாதங்களை நினைத்து தியானம் செய்க என்று உபாயம் அருளுகிறார்.