Wednesday, November 22, 2006

13. இருக்கிறானா இல்லையா?

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென நின்றதுவே. 13

//முருகன் தனி வேல்முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ?//

அ, ஆ வென்று வெறும் எளிமையான எழுத்து எழுத பழக்கக் கூட ஆசிரியர் ஒருவர் வேண்டும். எழுத்துக்களை நாமே கற்றுக்கொள்ள முடியாதா? பாடங்களுக்குத்தான் புத்தகங்கள் இருக்கின்றனவே. சுயமாக படித்துக்கொள்ள முடியாதா? முடியாது. அதுதான் குருவின் மகத்துவம். ஒவ்வொரு பருவத்தில் நமக்கு ஒவ்வொரு பக்குவம். வைரத்தை தீட்டுவது போல் நிதானமாக, நேர்த்தியாக நம்மை தயார்படுத்துவது ஆசிரியர்களின் பணி. ஆரம்ப பள்ளி, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி அளவு பேராசிரியர்கள் என ஆசிரியர்களில் சிலவகை. ஆனால் அடிப்படை பணியென்னவோ ஒன்றுதான் அல்லவா? நிலையற்ற உலக வாழ்க்கைக்கே ஆசிரியர்கள் வழிகாட்டிகளாய்த் தேவைப்படும் போது, ஆன்மிகத்திற்கு வழிகாட்டிகள் வேண்டாமா? இறைவனைக் குறித்த நம் தேடலுக்கு? ஒரு குரு வேண்டாமா? வாரியார் சுவாமிகள் சொல்வார்கள். மாதா பிதாவை பிள்ளைக்கு அடையாளம் காட்டுவாள். பிதா நல்ல குருவை. குருவோ தெய்வத்தையே அடையாளம் காட்டுபவர். அதனால் தான் அந்த வரிசையில் நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று.

ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். குரு தெய்வத்தை அடைய வழி தான் காட்டுவாரே தவிர குருவே தெய்வம் கிடையாது. அப்படி எந்த ஒரு நேர்மையான குருவும் சொல்லிக்கொள்ள மாட்டார். இன்னொன்று இவர்கள் கடவுளுக்கும் நமக்குமிடையே ஆன இடைத்தரகர்கள் கிடையாது. இந்த குரு, ஆச்சாரியர்கள் யாருமே எனக்கு வேண்டாம், நானே இறைவனை அடைந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா. அதுவும் நியாயம்தான். செய்யலாம். எப்படியென்றால் நானே சொந்தமாக E=mc^2 ப்ரூப் கண்டுபிடித்து அதன் பயனை என் சொந்த முயற்சியில் மட்டுமே அடைவேன் என்பது போன்றது. சொந்த முயற்சி என்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், பலர் செய்து தெளிந்த காரியத்தை திரும்பவும் செய்தே தீர்வேன் என்பது தேவையற்ற காலவிரயம், அல்லவா? இன்னும் பல நூறு பிறப்புகள் தேவைப்படுமல்லவா?

பல கோடி யுகங்களாக நம் பாரதப் புண்ணியபூமியில் தோன்றி வந்துள்ள பல கோடி மகான்கள் அருந்தவங்களும், யோகமும் செய்து கற்றதுதான் இறைவனை அடையும் வழி. அவர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ள சூத்திரங்களிலும் மார்க்க்ம் தான் சொல்கிறார்களே தவிர, இறைவனை நேரே நமக்கு டோர் டெலிவரி செய்யவில்லை. பல மார்க்கங்களில் எந்த மார்க்கம் நமக்கு சரிப்பட்டு வருமோ, அதற்கு தகுந்த குருவின் உதவியை நாடினால் அவர் நமக்கு உபாயங்கள் அருளுவார். வாய்ப்பாடு டேபிள்ஸும், லாக் டேபிள்ஸும், கால்குலேட்டரும் எப்படி பயன் படுகின்றனவோ, அது போலவே குருவின் அறிவுரைகளும் சாதகம் செய்தால் பயன் தர வல்லன. கால்குலேட்டர் கணக்குக்கான விடையைச் சொல்லுமேயொழிய problem க்கான் தீர்வைச் சொல்லாது. ஒரு கால்குலேட்டரையோ லாக் டேபிளையோ சரியாக பயன்படுத்தி விடை காணவேண்டியது நம் வேலை. அதுவே தான் ஆன்மிகத்திலும். இவ்வாறு குருவானவர் வழிகாட்டியாக கொண்டு, சொந்த முயற்சியில் கடைத்தேற வழிகாண வேண்டும். அதோடு கூட குருவானவரின் சத்சங்கமே ஒருவனின் முயற்சிகளை நல்வழிப்படுத்தி ஒழுங்குசெய்யும். அப்படி வருவதே குருவின் தீட்சை. அதுவும் முக்கியமான component இதில்.

குருவினுடைய மகிமையைப் பார்த்தோம். இங்கே அருணகிரியார் சொல்வது ஞானத்தின் வடிவான வேலை ஏந்தி, அண்ட சராசரங்கமெங்கும் வ்யாபித்து உலகில் உள்ளவை இல்லாதவை இனிவருபவை என முக்காலமும் காரியமும் உணர்ந்தவனாய், அனைத்து ஞானத்திற்கும் சுடராய் யோக நிலையில் நின்று அருள் தரும் ஒரே பெருமான் கந்தன். அப்படி தனியொருவனாக, அனைத்தும் அறிந்தவனாக தனிமையில் நிற்பவன் கந்தவேள் மட்டுமே என்பதைக் குறிக்கவே தனி என்னும் பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். அப்பெருமானை குருவாய் கொண்டவர்கள் மட்டுமே மெய்ப்பொருளை உணரமுடியும். அதுவும் அவனை குருவாய்க் கொள்வதே அவன் அருள் இல்லாமல் கிடைக்காது. அந்த முருகனைக் குருவாக கொள்வதற்கு அவனை நாம் எங்கே சென்று தேடுவது? சீடனாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நேரில் எங்கே பார்த்து விண்ணப்பம் கொடுப்பது? முருகனை எங்கே எவ்வாறு அடையாளம் காண்பது?

//உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே//
உருவம் அன்று. அருவம் அன்று. உளது அன்று. இலது அன்று. இருள் அன்று. ஒளியும் அன்று. இப்படி எதிலும் இருப்பவன். அதே நேரம் எங்குமே இல்லாதவன். அவனைத்தேடி எங்கே அலைந்தாலும் கிடைக்கமாட்டான். அப்படியென்றால் தேடி என்ன பயன் என்று எண்ணக்கூடாது. கந்தனை நம் அறிவிற்கு எட்டிய பொருட்களில் ஒன்றாக define செய்துவிடலாம் என்று தேடினால் கண்டிப்பாக கிடைக்க மாட்டான். அது ஆணவம். ஆணவ மலம் ஒழியும் வரை இறைவனைக் காண முடியாது என்பதை முன்னரே சில பாடல்களில் பார்த்துள்ளோம்.

"அங்கே இங்கே என்று அலையாதே மனமே!
ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே!"

என்று ஒரு பாடல் உண்டு. கண்ணன் கோகுலத்தில் இருக்கிறான், துவாரகையில் இருக்கிறான், வைகுண்டத்தில் இருக்கிறான் என்று அலைந்து அயராதே மனமே. சும்மா இரு சொல் அற என்று சென்ற பாடலில் பார்த்தோமல்லவா? அப்படி சும்மா இருந்தால் உன்னுள்ளே உன் மனம் தான் ப்ருந்தாவனம் என்று புரியும். அங்கேயேதான் கண்ணனும் இருக்கிறான் என்று பொருள் வரும். அவ்வாறே அருணகிரியாரும் சற்று விளையாடுகிறார்.

அங்கே இல்லை, அதுவும் இல்லை, இதுவும் இல்லை, இங்கேயும் இல்லை. ஆணவத்தால் விளையும் தேவையற்ற தேடலை விட்டு சும்மாயிரு சொல்லற. உன்னுள்ளே நிற்கிறான் கந்தன். அவனை தேடு. கந்தனின் அநுபூதி நாம் வேண்டும் பயன். அந்த அநுபூதி எப்படி அடைவது? அந்த முருகனையே குருவாக கொண்டால் மட்டுமே அதற்கான வழி கிட்டும்.

Monday, November 06, 2006

12. திருடன் வருவானா? திருடிச் செல்வானா?

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)

//செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்//

அம்பாளின் அம்சமாய் வந்த சிவந்த மான் ஒன்று சிவமுனியின் பார்வை பட்டதால் கருவுற்று அவ்விடத்திலேயே வள்ளிக்கிழங்கு செடியொன்றின் அருகாமையில் ஈன்றுவிட்டு மறைந்தது. அவ்வழி வந்த வேடரின் அரசன் அம்மகளைத் தம்மகளாய் தத்தெடுத்து வளர்த்து வரலானான். அரசனுக்கு வள்ளிக்கு முன்னர் ஐந்து பிள்ளைகள். அவர்களும் முருக பக்தியில் சிறந்து விளங்கினர். குடும்பத்து ஒழுக்கம் குழந்தைக்கு வராதா? கண்ணனுக்கு ஒரு ருக்மிணி போல குறமகள் வள்ளியும் முருகவேளின் மனைவியாகவே தன்னை பாவித்து வாழ்ந்துவந்தாள். சதா சர்வகாலமும் முருகப்பெருமானையே நினைத்து நினைத்து நெக்குருகி ஆட்கொள்ள வேண்டி வந்த வள்ளியை தோழியர் 'அந்த முருகனா வருவான்? அதுவும் உன்னை மணக்க? பைத்தியக்காரி' என்று கிண்டல் செய்தனர்.

திருடன், கள்வன் என்று ஒருவனை இழிவாய்க் கூறுவார்கள். ஆனால் அந்தப் பட்டத்தையும் முருகன் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். அருணகிரி முருகனின் கருணையை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறார். செம்மான் மகளை மணந்த மணாளன் என்று சொல்லாமல் திருடும் திருடன் என்று சொல்வதன் மூலம். இதற்கு நேரடியாக கந்த புராணத்தில் வேடர்க்கரசன் அவ்வாறு பெருமானை விளித்தமையால் அதே சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார் என்பதைவிட, தன்னையே நினைத்து உருகும் பக்தர்களின் மேல் முருகனுக்கு பேராசை என்பதைத் தான் குறிப்பால் சொல்கிறார் எனக்கொள்ள வேண்டும். அவனுக்கும் அவனடியார்க்கும் நடுவே யார் குறுக்கே நின்றாலும், நடுநிசியில் ஒரு திருடனைப் போல தெரியாமல் வந்து கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, தன் அடியாரைக் கவர்ந்து சென்று தன்னுள் கலக்கச் செய்துவிடுவான் குமரன்.

வள்ளி என்ன தவயோகியா? இல்லை பூஜை பல செய்தாளா? கோயில் கோயிலாக சுற்றினாளா? மந்திர தந்திரங்கள் கற்றுத்தேர்ந்தவளா? இல்லியே. இவையொன்றுமேயில்லாத சாதாரண குறமகள். அவளுக்கு பின் எங்கேயிருந்து இந்த கீர்த்தி? எவ்வித பிரதிபலனும் எதிர்பாராத உண்மையான பக்திக்குத்தான் இறைவன் அடிமை என்பது தெளிவு ஆகிறது. நந்தனுக்குக்காக தன் உற்ற வாகனமான நந்திக்கே 'நகர்ந்து நில்' என்று பரமேஸ்வரன் ஆக்ஞையிடவில்லையா? சிதம்பரத்தையே பார்த்தறியாத, வேதத்தையே கேட்டறியாத பாமரனுக்கு சிவயோகம் அளித்துக்காக்கவில்லையா?

முருகன் சிவகுமரனேயல்ல, சிவனே தான் என்கிறது கந்தபுராணம். அதனாலே தான் அவன் பிறவான் இறவான். என்றுமே பிறப்பில்லாதவன். என்றென்றைக்கும் இறப்பில்லாதவன். சர்வேஸ்வரன் அவனே.

//சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே//

சும்மா இரு சொல் அற - என்று எளிய தமிழில் திருவண்ணாமலையில் கந்தன் அருணகிரிநாதருக்கு உபதேசித்தான். கேட்பதற்கு மிக எளிதான உபதேசம் தான். நடைமுறைப்படுத்துவதில் தான் பெருஞ்சிக்கல். ஒரு நிமிடம் கண்ணைமூடி சும்மா இருக்க முயற்சி செய்தாலே தெரியும். இந்த மனம் ஒரு குரங்கு விடயத்தை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. வீட்டில் ஜாங்கிரி வாங்கி வைத்திருந்தார்களானால், இப்போதைக்கு ஜாங்கிரி சாப்பிடுவது ஒன்றேதான் இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொருளாய்த் தெரியும் நமக்கு. ஜாங்கிரி சாப்பிட்டு திகட்டிவிட்டதென்றால் அடுத்து விடயத்துக்குத்தாவும் நம் மனம். காரைப் பார்த்தால் கார் வாங்கவேண்டும், வீடு பார்த்தால் வீடு கட்டவேண்டும் என்று கிளைக்கு கிளை தாவும் மந்தியைப் போன்றதுதான் மனிதமனம். இப்படி ஒரு சமயத்தில் இருக்கும் ஆசை மட்டுமே அப்போதைக்கு உலகிலேயே மிகவும் முக்கியமானதாய் தெரியும். இதுதான் அ(ந்த) மா பொருள்.

ஆனால் வாயைக்கட்டி, மனத்தைக்கட்டி, மெய்யைக்கட்டி முருகன் அறிவுரைப்படி இருந்தவுடன் இந்த மா பொருட்கள் ஒன்றுமே தெரியாமல் சிந்தையிலிருந்து மறைந்து போய், முருகனுடன் கலந்துவிட்ட தவயோகநிலை ஒன்று மட்டுமே நிலைக்கிறதே! இது என்ன ஆச்சரியம் என்று வினவுகிறார் அருணகிரியார்.

------------------------------------------------
சிவந்த மானின் மகளைக் கள்வனைப்போல திருடியவன், அகிலாண்ட கோடிக்கும் பெருமான் முருகன், அவன் பிறப்பில்லாதவன், இறப்பில்லாதவன். அவன் சும்மா இரு சொல் அற என்று சொன்ன நொடியே, நான் இதுவரை பெரியவை, முக்கியமானவை என்று எண்ணிவந்த உலக வஸ்துக்கள் அனைத்தும் மறந்து அறியாமல் போனேனே! அவனுளே கலந்த மோன நிலை மட்டுமே கண்டேனே! என்ன ஆச்சரியம்!

Tuesday, September 05, 2006

11. உணர்வித்து உய்வித்தவன்!

கூகாஎன என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
த்யாகாசுர லோக சிகாமணியே (11)

//நாகாசல வேலவ! நாலுகவித் த்யாகா! சுரலோக சிகாமணியே!//

அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய புண்ணியத்தலமான திருச்செங்கோட்டிற்கு நாகாசலம் என்ற பெயரும் உண்டு. அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்குமிடையில் சண்டை மூண்டது. மகாமேரு மலையை ஆதிசேஷன் சுற்றிக்கொள்ள, கடுமையாக நடந்த போரின் முடிவில் வாயு தன் வலியால் ஆதிசேஷனை ஊதித்தள்ள அவர் விழுந்த குன்று அவர் குறுதிபட்டு செந்நிறமாக மாறியதால் திருச்செங்குன்றூர் ஆயிற்று. அதுவே சேஷாசலம் என்றும் நாகாசலம் என்று வழங்கப்பட்டது. திருமலைக்கும் சேஷாசலம் என்ற பெயர் உண்டு, ஆனால் அருணகிரி குறிப்பிடுவது நாகாசலமான திருச்செங்கோடு என்றுதான் நினைக்கிறேன். அந்த ஊரின் செங்கோட்டு வேலவர் மிக பிரசித்தம்.

நாலு கவித் த்யாகா - நான்கு விதமான கவிதை வகைகள் தமிழில் உண்டு. அவற்றை தருபவனே! தென்னாடுடைய சிவனல்லவா. அவர் அம்சத்துடன் கூடிய குமரன் தமிழ்க்கடவுளல்லவா. சிலருக்கு பேச்சே வராது. பலருக்கு வரும். சிலருக்கு - இவருக்கு ஏன் வருகிறது என்று மற்றவர் மனம் குமுறும், சிலர் பேச ஆரம்பித்தாலோ மற்றவரெல்லாம் வாயை மூடிக்கொள்வர். இப்படி பலவிதமாய் பேசக்கூடிய மொழிப்புலமை பெற்றோர் இப்பூமியில் உண்டு. ஆனால், ஆயிரம் பேர் பாடினாலும் இறைவனாகத் தேடிவந்து 'இவன் பாடி நாம் கேட்கவேண்டுமே' என்கிற கருணையாலும், ஆசையாலும் வந்து சிலருக்கு தீட்சை கொடுப்பதுண்டு. அவர்களெல்லாம் புண்ணியவான்கள். அப்படி கொடுக்கப்பட்டவர் அருணகிரி. நாலுவிதமான கவிதைவகைகளையும் எனக்கு தந்த தயாபரா!

சுரலோக சிகாமணியே - "அசுரர்"க்கு எதிர்ப்பதம் சுரர். சுரர் என்றால் தேவர்கள். தேவர்களின் லோகங்களுக்கும் அவற்றில் வாழ்வோர்க்கும் முதன்மையான தலைவனே! மற்ற மேக்கப்பெல்லாம் போட்டுமுடித்துவிட்டு கடைசியாக பதவிசாக முடியில் சூடிக்கொள்ளும் ஆபரணம் தான் சிகாமணி. அதுவே மேலானது. மற்றவற்றிற்கும் மேலாய் இருப்பதனால் மட்டுமல்ல. மேன்மை பொருந்தியதாலும் தான்.

//கூகா என என்கிளை கூடி அழப்போகா வகை மெய்ப்பொருள் பேசியவா//
சென்ற பாடலில் தன்னை அழைத்துச் செல்ல யமனின் தூதர்கள் வருகையில் எதிரே வந்து ஆட்கொண்டருள்வாய் என்று அழைத்தார். ஒருவர் இறந்தால் சுற்றத்தவரும் உறவினரும் கூடி அழுது ஒப்பாரி பாடுவது வழக்கம். ஆன்மாவைப் பொறுத்தவரை இறப்பும் பிறப்பும் ஒன்றுதானே. உடல் தானே அழிகிறது. இங்கே இறக்கும் ஆன்மா, அது செய்த புண்ணிய பலன்களுக்கு ஏற்றவாறு மறுபிறப்போ, சிவானுபூதியோ அடைகிறது. ஒரு ஆன்மா பிறக்கையில் சந்தோஷப்படும் நாம், அது இறக்கையில் வருத்தப்படுகிறோம். பிறக்கையில் உண்மையில் பெற்றோர்கள் சந்தோஷப்படவேண்டிய காரியம் தான். வம்சம் வளர்க்க சந்ததி பிறந்ததை நினைத்தா சந்தோஷமா படவேண்டும்? அது மீண்டும் பந்தபாசங்களுக்கல்லவா நம்மை இட்டுச்செல்லும்? பிறந்த இந்த உயிருக்கு நம்மால் இயன்ற அளவு நற்புத்தியையும் நற்பண்பையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆன்மாவை இந்த ஜென்மத்திலேயே கடைத்தேற வழிவகை செய்ய பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறதே; அந்தப் பரம்பொருளே "இந்த ஆத்மாவிற்கு ஒரு நல்லவழியை காட்டு என்று நம்மையும் நம்பிக்கொடுத்திருக்கிறானே" என்றல்லவா சந்தோஷப்படவேண்டும்.

இறக்கையில் யார் அழுவார்கள்? 'அய்யோ, தொண்ணூறு வயசு இருந்தாரே, பண்ணது முழுக்க பாவம். செய்தது முழுக்க துரோகம். இவராத்மா கடைத்தேற இன்னொரு ஜென்மா பிறக்க வேண்டியிருக்குமே' என்று சுற்றத்தவர்கள் எண்ணுகையில் தான் அய்யோ அம்மாவென்று கூச்சல் போட்டு (கூ கா) அழவேண்டும். அப்படி வாழ்க்கையையே பாவமாக கழித்தவர்களின் சுற்றத்தவர்கள் அழுவதிலலும் நியாயமுண்டு.

அடியாராய் ஆக்கிக்கொள்வதும் பின் அவரை தன்னிடம் அழைத்துக்கொள்வதும் இறைவன் சித்தம் அல்லவா. ஒரு அடியார் இறந்தால் கூச்சலிட்டா அழுவார்கள்? 'புண்ணியவான், சீக்கிரமே சிவலோகம் போய்ச்சேர்ந்துவிட்டாரே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இவரிருந்த நம் வீட்டிற்கு சாநித்தியம் இன்னும் சற்று அதிகமாகியிருக்குமே. பூவுடன் சேர்ந்த நாரைப்போல நாமும் இன்னும் கொஞ்சம் நற்கதி அடைந்திருக்கலாமே' என்று உருகுவர். அவர்களின் உருக்கத்தில் ஒப்பாரி இருக்காது. ஆதங்கமே இருக்கும். அப்படி என்னையும் அடியாராக்கிக் கொண்டு - என் சுற்றத்தவர் என் ஆத்மா அடுத்த பிறவியில் பாவஜென்மமாய் பிறக்குமே என்று எண்ணி எண்ணி ஒப்பாரி வைத்து அழாத வகையில் - எனக்கு இப்பிறவியிலேயே நற்கதியை, மெய்ப்பொருளைக் காட்டிய தலைவா என்று உருகுகிறார் அருணகிரி.

நற்கதியை நாமும் இப்பிறவியிலேயே அடையலாம். நிதமும் அந்த செங்கோட்டு வேலனைப் பணிந்தால்.

--
திருச்செங்கோட்டு வேலவா! தேவலோகத்தின் இறைவா! தமிழள்ளித்தந்த தலைவா! மறுபிறப்பென்று ஒன்று இல்லாமல், என்னையும் அடியாராக்கிக்கொண்டு, என் சுற்றத்தவர் நான் இறக்கையில் என் ஆன்மா முக்தி பெறுமோ என்று கூச்சலிட்டு ஒப்பாரி வைக்காமல் - எனக்கு பரமானந்தத்தை உபதேசம் செய்த ஞானப்பரம்பொருளே!

Tuesday, August 08, 2006

10. மாயை மடியத் தொட்டான் முருகன்!

கார்மாமிசை காலன் வரிற்கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! (10)

//தார் மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே//

தார் மார்ப - தார் என்றால் மாலை. அழகிய மாலை அணிந்த மார்பை உடையவா. வலாரி என்பது இந்திரன். வலாசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு வலாரி என்ற பெயர் உண்டு. சூரபத்மன் இந்திரனுடைய பட்டணத்தைக் கொண்டவன். அதனால் அவன் வலாரியின் தலாரி (தலத்திற்கு). சூரபத்மன் நின்றது மா மர வடிவத்தில். மா வடிவத்தில் உயர்ந்து நின்ற இந்திர லோகத்தை அழித்த சூரனை..

மடியத் தொடு வேலவனே - முருகன் வேலால் அடித்தானா? அவனுடைய ஞானவேல் தொட்டவுடன் ஆணவ மலம் தூளாகி மடிந்தது. அடிக்க வேண்டியிருக்கவில்லை. வேலால் மெதுவாய்த் தொட்டான் முருகன். அதில் அழிந்தவன் சூரனா? இல்லை. சூரன் நற்கதியடைந்து முருகனின் அருகிலேயே என்றென்றும் நிற்கும் அருள் பெற்றான். அழிந்தது அவனின் ஆணவமே. இதைதான் நினைவில் கொள்ளவேண்டும். அவனை துதித்தால் நம்மை காத்து கெடுநிலையிலிருந்து ஏற்றுபவன் கந்தன். நம்மை அழிப்பவன் அல்ல. நம் பாவங்களும், அறியாமையும் தான் அவனைக் கண்டு பயப்படும். நாம் பயப்படத் தேவையில்லை. பக்தி செய்தாலே போதும். எத்தகைய தீய கதியிலிருந்தும் நம்மைக் காத்து தன்னருகிலேயே வைத்துக் கொள்பவன் அவன்.

//கார்மா மிசை காலன் வரின் கலபத்தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்//

கார் என்றால் கரிய. கார்மேகம் என்று சொல்கிறோம் இல்லையா? மா என்றால் பெரிய மிருகம். கரிய பெரிய மிருகமான எருமை மீதேறி உயிரை எடுப்பவன் காலன். அவன் சத்தியசீலன். தர்மத்திற்கு நிஜமான தலைவன். நமக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தால் அழைத்துச் செல்லவேண்டியது காலனின் கடமை. அதுதான் அவன் தர்மம். அவனைக் கொடியவன் என்றோ அவனிடமிருந்து நம்மைக் காத்திடு என்றோ யாரும் சொல்வதில்லை. (மார்க்கண்டேயர் கதை வேறு, அது இங்கே வேண்டாம்). பொதுவாக காலனிடமிருந்து காத்திடு என்றால் மரணபயத்திலிருந்து நம்மைக் காத்திடு என்றுதான் பொருள். மரணபயம் என்பது எல்லாருக்கும் இருப்பது. என்னைக் கேட்டால் இருப்பது நல்லதுதான். என்னடா இப்படி சொல்லுகிறேனே என்று டென்ஷன் ஆகவேண்டாம்.

இந்த பிறவியில் நல்ல மனிதப் பிறப்பாய் நோய் நொடியின்றி, ஆரோக்கியமான சவுகரியமான வாழ்வை பெற்ற நமக்கு அடுத்த ஜென்மம் என்று இருப்பின் அதில் எதுவாகப் பிறப்போமோ என்று பயம் இருக்கவேண்டாமா? இப்போதைய சுகமான மனித வாழ்க்கையாய் இல்லாமல் தினந்தோறும் மற்ற விலங்குகளுக்கு பயந்தோடிக் கொண்டிருக்கும் மானாகவோ, முயலாகவோ பிறக்க நேர்ந்தால்? இந்த நற்பிறவியிலேயே ஆண்டவனை ஒரு நொடி கூட நினைக்காத மனம், அப்போது மட்டும் நினைக்குமா? அதனால் மரணபயம் என்பது இந்தப் பிறவியிலேயே முருகனை அடைய இன்னும் சிரத்தையுடன் நாம் முயற்சி செய்ய உதவுமானால் இருப்பதில் தவறே இல்லை அல்லவா?

பாடலில் சொல்வது கரிய எருமையில் காலன் என்னை அழைத்துப்போக வருகையில், கலபத்தேர் - அழகான மயில் வாகனத்தில் நீ என்னெதிரில் தோன்றி ஆட்கொள்ளவேண்டும் என்று பாடுகிறார் அருணகிரி. அவருக்கு காரியசித்தி ஆகிவிட்டது. நமக்கு? தினமும் பாடிப் பிரார்த்தனை செய்யவேண்டிய பாடல்களில் ஒன்று இது.

Wednesday, July 26, 2006

9. ஊசல் படும் பரிசு ஒழியுமா?

மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல் படும்பரி சென்றொழிவேன்
தட்டூடற வேல்சயிலத் தெறியும்
நீட்டூர நிராகுலநிர்ப் பயனே!


//மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலைப்பட்டு ஊசல் படும் பரிசு என்றொழிவேன்?//
மட்டு - போதையூட்டும் நறுமணம். இந்த மாதிரி மட்டு ஊர் குழலாம். மட்டு ஊறுற மாதிரி குழல் மங்கையர்கிட்டதானே இருக்கும்? போதையூட்டும்னு இங்க பொருள்ள சேர்த்திருக்கே, அத நினவுல வச்சுக்கணும். திருவிளையாடல் பாட்டு மாதிரி இயற்கையிலேயே மணமிருந்ததோ, இல்லை செண்ட் போட்டுதான் வந்ததோ... வாசனையா இருக்கறது மங்கையரின் கூந்தல் தான். ஆனா, நற்குணம் உடைய பெண்களின் கூந்தலில் நறுமணம் இருக்கும். போதை இருக்காது. போதையூட்டும்படியான நறுமணத்தின் தேவை விலைமாதர்களுக்கே.

இந்த மாதிரி மயக்கும் நறுமணத்தை கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் மையல்வலையில் - சிலந்திகள் வலைபின்னி வச்சுருக்கும். அதுல போய் மாட்டிக்கறது பூச்சிகள் தானேயொழிய, சிலந்திகள் பூச்சிகளை பிடிக்கறதில்லை. வலைன்னாலே இதுதானே விசேஷம். ஈட்டியோ, அம்போ வேறொருவர் எய்து நம்மளை வீழ்த்த வேண்டாம். வலையில் விழுவதற்கு வேற வெளிகாரணிகளை blame செய்ய முடியாது. நாம் விழுவதற்கு நாமே தான் காரணமாகத்தான் இருக்க முடியும். நமக்கு அடுத்தவர்கள் மூலம் வரும் துன்பங்கள், கர்மபலன்கள் ஒருபுறம் என்றால் நாமே போய் விழும் வலைகள் மற்றவை. அவற்றில் முக்கியமானது காமம். இப்படி ஒருவன் சுயமாக போய் காமத்திலே விழுவதனாலேதான் காமவலை என்று பெயர் வைத்தார்கள். இதுவே இயல்பாய்த் தோன்றும் காதலை வருணிக்க காமபானம் தாக்கிற்று என்று சொல்வோம்.

ஆனா, மனித மனத்தோட இயல்ப அழகா சொல்லிருக்கார் சுவாமிகள். வலையில்பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்னு கேக்கறார். ஊசல்னா - ஊஞ்சல் மாதிரியான ஆட்டம்.

ஊஞ்சல் - அலுக்காத மகிழ்வு தரும் விளையாட்டு இல்லையா? கூட ஒருத்தர் ஆடக்கிடச்சுட்டா கேக்கவே வேணாம். ஆனா, ஊஞ்சல் விளையாட்டுல இருக்கற இடத்த விட்டு நகரவே மாட்டோம். முன்னயும் பின்னயும் போகிறா மாதிரி இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு முன்னாடி போறோமோ, அவ்வளவு தூரம் மறுபடியும் நம்மை ஊஞ்சல் கயிறூ இழுத்து பின்னாடி தள்ளும். அதேபோல காமவலையில் விழுந்தவனையும் தப்பித்து போக முடியாதவாறு சிலந்தி வலையினைப் போல பிடித்துக்கொள்ளும்.

பொதுவாகவே குற்ற உணர்ச்சி என்பது மனித இயல்பில் மிகக்குறுகிய காலம் தான் நம் நினைவில் நிற்கும். இப்போ ஒரு திருட்டைச் செய்தோமானால், திருடிய ஐந்து நிமிடத்திற்கு திக் திக் என்று வேகமாக அடித்துக்கொள்ளும் மனது, அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ஒன்றும்தான் நடக்கவில்லையே, இன்னொரு பொருளைத் திருடித்தான் பார்ப்போமே என்று நினைக்கத் தயங்காது. அதுபோல "காமவலையிலிருந்து விடுபட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால், அதற்குண்டான திடத்துடனும் ஒழுக்கத்துடனும் என் மனம் தொடர்ந்து நிற்க இயலாமல், மறுபடியும் மறுபடியும் பழைய வலையில் சிக்கிய நிலைக்கே சென்று ஊசலாடுவதைப் போல் ஆடுகிறேனே. இது என்று தீரும்?" என்று அருணகிரியார் கேட்கிறார். 'ருசி கண்ட பூனை' என்று நாம் சொல்கிறோமே. அதுபோலத்தான். இது இயல்பு. இத்தகைய வலைகளிலிருந்து மீண்டு வருவது இறையருளன்றி நடக்காது.


//தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்பயனே//சயிலம் என்றால் மலை. இங்கே குறிக்கப்படுவது கிரவுஞ்ச மலை. தட்டுன்னா தடைகள். தட்டுகளையெல்லாம் ஊடுருவி, அவற்றை அற்றுப்போக செய்யும் படியான வேலாயுதத்தை வைத்து சூரனை அழிக்க தடையாய் வந்த கிரவுஞ்சமென்னும் பர்வதத்தையே தூளாக்கிய வடிவேலா! இந்த சிலந்தி வலையைப் போன்ற காமவலையை தகர்த்தெறிய எவ்வளவு நேரம் ஆகும். ஏன் இன்னும் செய்யாமல் என்னை இப்படி ஊசலாட விட்டு விளையாடுகிறாய்?

நிராகுலனே - என்றும் துன்பம் என்பதே இல்லாமல் இருப்பவனே. நிர்பயனே - ஏதொன்றுக்கும் பயமொன்று இல்லாதவனே..

-------------
கிரவுஞ்ச மலையை அழித்தவா! துன்பமில்லாதவா! பயமற்றவா! முருகா! காமவலையில் விழுந்து ஊசலில் தத்தளிக்கும் என் துன்ப நிலை என்று அழியும்?

Tuesday, April 18, 2006

8. பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா!

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)

//அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா//
அமரும் பதி - நாம் இருக்கற ஊர். கேள் னா நம் சொந்தங்கள். யாதும் ஊரே நியாபகம் வருதில்லையா? அகமாம் - அகம்+ஆம் - அகம் கறது இங்க குறிக்கறது நம் மனத்தை, நாம் என்னும் எண்ணத்தை. இப்போ மேல படிக்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம் பண்ணிப்பாருங்க. இப்போதைக்கு நீங்க எங்க இருக்கீங்க, என்ன சம்பாதிக்கறீங்க, ஸ்டேட்டஸ் இன்னபிற, எவ்ளோ வசதி வாய்ப்புகளோட இருக்கீங்கன்னெல்லாம் நினச்சு பாருங்க ஒரு நிமிஷம். சுகமா இருக்கா? எல்லாருக்கும் சுகமா இருக்கறதுதானே.. தப்பில்லை. உங்க மொபைல் போனிலோ, கணினியோ .. அதுல காலெண்டரத் தொறங்க. கொஞ்சம் டேட் மாத்துங்க. என்னோட விண்டோஸ் XP-ல 2099 ஆம் வருஷம் வரை இருக்கு. 2099-ல நான் இருக்கப்போறேனா? இல்லை என்னையப் பத்தி யாராவதுதான் ஒருநொடி யோசிக்க போறாங்களா? இப்போ நான் பெருமையா ஸொஸைட்டில இதுவாக்கும்னு தானே நாமெல்லாம் நினச்சுகிட்டிருக்கோம். அதுவே 2099 வேண்டாம், 2050 வரைக்குமாவது தாங்குமா? நம்ம பதவியும் பணமும் ஆடம்பரமும்? எதுக்கு காலெண்டர் பாக்கச் சொன்னேன்னா, வெறும்ன நினச்சு பாத்தா பெரிய விஷயமா இது தெரியது. அதுவே இதே ஏப்ரல் 17 ஆம் தேதின்னு ஒண்ணு 2099 லேயும் வரப்போது. அப்போ இப்ப நம்ம கிட்ட இருந்ததெல்லாம் எங்க போச்சு? நாம தான் எங்க போனோம்? இல்லை, நம்மகிட்ட இப்போ இருக்கறதெல்லாம் பொய்யா? னு நினைக்கத் தோணும்.

இது எதுவுமே நிரந்தரமில்லை, வெறும் மாயைங்கறதுதான் உண்மை. அதப் புரிஞ்சுக்கிட்டாலே இறைவனை பாதியடைஞ்சா மாதிரிதான். இதத்தான் என் ஊர், என் சொந்தம், நான் என்று எனக்குஇருக்கும் பிரமைகள் எல்லாம் முற்றிலும் கெட உண்மையான பொருளை, எது நிரந்தரமானதென்று என்னிடம் பேசியவான்னு முருகனைப் பாடறாரு இங்கே.

//குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே//

அடுத்த வரிக்கு வருவோம் இங்கே. இதில் மூன்று வித adjectives உபயோகப்படுத்தறாரு. குமரன். இதுக்கு பொருள் தேவையில்லை. கிரிராச குமாரி - நம்ம பர்வத ராஜனோட பொண்ணான பார்வதி. அவங்களோட மகனே.

சமரம் பொரு தானவ நாசகனே - போரிட வந்த அசுரர்களை அழித்தவனே.

சரி.. ஏன் இப்படி மூன்று உருவங்கள் கொடுக்கிறார் அருணகிரி? எது மெய்ப்பொருள் என்று அசரீரியாய் கந்தன் பேசவில்லையே. உங்களுக்கு எப்படியோ? அசரீரியெல்லாம் இந்தக்காலத்துல கேட்டா, யாராவது லவுட் ஸ்பீக்கர் வச்சு விளையாடறாங்களோன்னு நினச்சுட்டு போயிடுவேன். அப்படியெல்லாம் PA வில் அறிவிக்காமல், இங்க பாருங்க, கந்தன் என்ன செய்யறான்னா, வேலை மெனக்கெட்டு அருணகிரியும் உண்மையத் தெரிஞ்சுக்கணுமேங்கற ஆசையில் அவரும் உணரக்கூடிய ஒரு சிறு உருவம் எடுத்துகிட்டு நேர்ல வந்து, எது நிரந்தரம் எது உண்மையான பொருள்னு சொல்லிட்டு போயிருக்கான். அவருக்குச் சொன்னவன், நமக்கும் சொல்வான். அவரைப் போலவே நிதமும் அவன் தாள் பணிந்தால்.

----
பார்வதியின் மகனே! குமரனே! போரிடவந்த சூரரை அழித்தவனே! என் ஊர், என் சுற்றம், நான் என்பது மாதிரியான உலக மாயைகள் என்னைவிட்டு அகன்றொழிந்திட மெய்ப்பொருளை பேசியவா!


--------
கொஞ்சம் நாட்களாக வேலை காரணமாக முன்பு போல் பதிய முடிவதில்லை. பொதுப்பாட்டு மெதுப்பாட்டாய் ஆனதுக்கு அதான் காரணம். கூடிய சீக்கிரம் திரும்ப பார்முக்கு வருவேன்னு நம்பறேன். பாப்போம்.

Wednesday, March 29, 2006

7. வடிவேலிறைதாள் நினைவாய்

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7


//கெடுவாய் மனனை கதிகேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்//
தினந்தோறும் வயசு ஏறுகிறது நமக்கு. வயசு மட்டும் ஏறி நின்றால் பரவாயில்லியே. நாம் தினமும் பார்க்கும் உலக விஷயங்களாலும், அடுத்தவரின் நடத்தைகளாலும், நம் எண்ணங்களாலும் என்று பல வழிகளில் நம் மனசை கல்லாக்கி மாசுபடுத்திக்கொள்கிறோம். போன பாடலில், அவனை நினைத்தால் போதுமே, அவன் பாதத்தாமரைகள் நம் மனதில் ஒளிவீசுமே என்று சொன்னவுடன் அது மிகவும் எளிமையானது என்கிற மாதிரி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். அது எளிமையானதுதான், நம் மனம் மும்மலங்களினாலும் அழுக்காய் கல்லாய் ஆகாமல் போயிருந்தால். கல்லின் மேல் தானாய் தாமரைப் பூக்கும் என்று சொன்னாயே, என்றால் அதுவும் உண்மை தான். ஆனால் அவனை நினைக்க வேண்டுமே. அதுகூட ஒரு நொடி செய்ய மாட்டேனென்றல்லவா நம் மனமும், எண்ணமும் எப்பொழுதும் வேறெங்காவது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு கடிவாளம் போடவேண்டாமா. அதனாலேயே தம் (நம்) மனதிற்கு ஆர்டர் போடுகிறார் அருணகிரி.

கெட்டுப்போய்க்கொண்டிருக்கிற மனமே! கதி கேள்! இதை விட்டால் நீ உய்வதற்கு வழி கிடையாது. இதைச் செய்து நற்கதி அடைவாய்.

1. கரவாது இடுவாய் - ஈயென்று உன்னிடம் வந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லாமல் ஈதிடு. இது என்ன சம்பந்தமே இல்லாமல் திருக்குறள் அறத்துப்பால் மாதிரி லெக்சரெல்லாம் அருணகிரி அளிக்கிறாரென்று நினைக்க வேண்டாம். இதற்கும் பொருள் இருக்கிறது. காசிக்கு போனால் நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொருளை விடுவோம், அல்லவா? (நானும் அப்ப காசிக்குப் போய் படிப்ப விட்டுடவான்னு கேட்டு பதிலுக்கு ஒரு 'இப்படியும் ஒரு அசடா' லுக் வாங்கிருக்கேன் ஸ்கூல் காலத்துல).

காசிக்கு போய் விடுவதற்கு உண்மையில் பொருள் என்ன? நமக்குப் பிடித்ததை விடுகிறோம் என்றால் பகவானுக்குக் கொடுக்கிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக நாம் அதுவரை ஒன்றின் மேல் இருந்த பற்றை விடுகிறோம் என்று அர்த்தம். இவ்வுலக விஷயங்களில் பற்றைவிடுவது மிகவும் அவசியமானதல்லவா? அதேபோல, ஒருவர் கேட்கும் பொருளை தானமாய்க் கொடுப்பதன் மூலம் அப்பொருளுடனான நமக்கிருந்த பற்றெனும் தளை அறுபட்டுப் போகின்றது. இதனால் நமக்கும் நன்மையே உண்டாகிறது. இந்தக் காரணத்தாலேயே நம் பெரியோர்கள் ஈதல் பற்றி அவ்வளவு சிலாகித்து சொல்லியிருக்கின்றனர்.

2. வடிவேலிறைதாள் நினைவாய் - இறைவனை நினையாது கொடுத்தால், நாம் கொடுக்கிறோம் என்று நினைக்கத்தோன்றும். அது அகம்பாவம். எதுவுமே நம்முடையதில்லை என்று உணர்ந்து நாம் என்னும் அகம்பாவம் - அதை விட்டொழிக்க எந்நேரமும் வடிவேலனின் இறைதாள்களை நினைப்பாய்.


//சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.//

மெய்யடியார்க்கு தீவினைகள் அறவே வராது என்று

காதலாற்கழற் சேவடி கைதொழ அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே!
சிதம்பரத்தில் உறைபவன் மீது காதல் கொண்டு அவன் செவ்வடிகளை எந்நேரமும் கைதொழும் அடியாரிடம் வினைகள் அண்டாது என்று சம்பந்தப் பெருமான் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதரும் இப்படி மேற்கூறியதைச் செய்தால் நெடுவேதனை - பிறப்பும் இறப்பும் இவ்வுலகவாழ்க்கையும் - இவற்றால் நம் ஆன்மா படும் நீண்ட வேதனையும் - தன்னை சுட்டெரிப்பாய். இதற்கு கந்தர் அலங்காரத்தில் இன்னும் அழகாக, நான்முகனுக்கே சவால் விடுகிறார் அருணகிரியார்.

பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் ...
என்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இருவிலங்கே


பிரம்மாவே(பங்கேருகன்)! கேள்! என் தலையெழுத்தை எழுத வேண்டுமென்று நீ நினைத்து, அதை என் கோவலனான முருகன் அறிந்தான் என்றால், உன் காலில் முற்சமயம் ஒரு விலங்கு போட்டவன் இப்போது இரண்டாவது விலங்கும் போடுவான்!

அப்படி குமரன் தாள்கள் பணியும் அடியார்களிடம் பிரம்மனும் கூட விளையாட முடியாது என்கிற போது வினைகள் எம்மாத்திரம்?

இங்கே அடுத்து வரும் 'விடுவாய் விடுவாய் வினையாவையுமே' கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்தது - வினைகள் இரண்டுவகை. நல்வினை தீவினை. தீவினை விட வேண்டும் சரி. ஏன் நல்வினையும் விட வேண்டும்? நல்வினையை விடக்கூடாது. ஆனால் அவற்றால் பயன் வருமென்ற எண்ணத்தை விடவேண்டும் என்கிறார். கண்ணன் கீதையில் சொன்ன கர்ம யோகமும் இதுதான். பலனை எதிர்ப்பார்க்காமல் உன் வேலையைச் செய். வேதனைகள் தானாகவே தூளாகும் இறைவனின் அருளால்.


---
கெட்டுக்கொண்டிருக்கும் மனமே! உய்ய வழி கேள்! இல்லையென சொல்லாமல் ஈதிடுவாய்! எந்நேரமும் குமரன் தாள் நினைவாய்! அதைச் செய்தால் உன்னை அண்ட வரும் வினைகள் யாவும் தூளாய் போகும்.

Monday, March 27, 2006

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமோ?

6. கல்லில் தாமரைப் பூப்பதும் ஆச்சரியமா?

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6


//திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ//
திணியான மனோசிலை - நம்மனசை மிகவும் உறுதியான கனமான கல்லென்று சொல்லிதான் அநுபூதியையே ஆரம்பித்தார் அருணகிரி சுவாமிகள். நெஞ்சக்கன கல்லுஞ் நினைவுக்கு வருகிறதா? ஏன் கல்லென்று சொன்னார்னு அந்தப் பதிவுலேயே (கடவுள் வாழ்த்து (காப்பு)) பாத்துட்டோம். அதனால் சுருக்கமாக.. சிலை என்றால் கல். சிலையை வடிக்கக் கற்கள் தானே பயன்படுத்தறோம். திடமாக இருக்கும் உறுதியான கல் போன்று இருக்கிறது நம் மனம்.

இந்தக் கல்நெஞ்சோட ரெண்டு வழியில போகலாம். முத வழி ரொம்ப ஈஸி வழி. என்னது? டமார்னு எடுத்து தரைல போடறது. முன்னாடி சொன்னா மாதிரி தூளாகிப்போன கல்லால யாருக்காவது எதாவது பயன் இருக்கா? நாம இருந்தா என்ன செய்வோம்? அந்த மாதிரி குட்டிக்கல்லையெல்லாம் பொறுக்கி பாதைக்கு வெளிய, யார் கால்லேயும் படாத மாதிரி தூக்கிப்போட்டுட்டு நம்ம வேலையப் பாக்கப்போய்டுவோம்.

இரண்டாவது பக்தி வழி. முருகன நினச்சா, அவனே நமக்கு பொற்கொல்லன். அருணகிரியவே அவன் செதுக்கி வெறும் கல்லை ரத்தினமாக்கலையா? அதுவே தான். வைரம் கிடைக்கும் போது வெறும் கல்லாதான் கிடைக்கும். எடுத்துத் தூக்கிப்போட்டுடுவோம். அதுக்கு ஒரு மதிப்பும் கிடையாது. ஆனா சுத்திகரிச்சு பட்டை தீட்டினா அத வெறும் கல்னு புறந்தள்ள முடியுமா? நம்மள நாமே பட்டை தீட்டிக்கறதுதான் பக்தி. அந்தப் பக்தியை நமக்கு தரவனும், அதன் பயனான அருளைத் தருபவனும் கந்தனே. அவன் தான் நமக்கு சிற்பி, பொற்கொல்லன் எப்படி வேணா வச்சுக்கோங்க. அப்படி வைரமான நாம் அப்புறம் என்னாவோம்? அவனுக்கே அணிகலனாவோம். இங்கே அணிகலனால் அவனுக்கு சிறப்பு கிடையாது. ஆனால், அவனால் நமக்கு முக்தி. அவனில்லாம அவனருள் இல்லாம நாம ஒருநாளும் வைரமாக முடியாது. மனசு யாருக்கும் பிரயோஜனமே இல்லாத கல்லாத்தான் இருக்கும்.

இதுவே அபிராமி பட்டர் கொஞ்சம் வேற மாதிரி

வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

னு பாடியிருக்கார். என்னதான் புதுவீட்டுக்கு போனாலும், நாம பிறந்து வளர்ந்த பழைய சொந்த வீடு மாதிரி வருமா? அந்த மாதிரி அபிராமியே வந்து பட்டரின் மனசை அவளோட பழைய வீடு மாதிரி நினைச்சு வந்து உட்கார்ந்துகொள்கிறாள்.

அதையே தான் இங்கே அருணகிரிநாதர் 'உன் பொற்பாதங்களையே நினைந்துருகும் அடியார்களின் மனதில் தாமரைபோல நீ மலர்வதில் ஆச்சரியமும் உண்டோ?னு கேக்கறார்.

நாம் குமரனின் பொற்பாதங்களை பணிகிறோம். அவனுக்கும் ஒரு மேலிடம் இருக்கணுமே. கால்ல விழ. அவன் யார் கால்ல விழுகிறான்னு கேள்வி.
//பணி யாவென வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே//
நம்ம 'அம்மா' கால்ல மந்திரிங்க விழற போட்டோக்கள பாத்துருக்கீங்களா? அவங்க பார்வையே ஆயிரம் கவித சொல்லும். பயபக்தியா சாஷ்டாங்கமா விழுந்து எழுந்து, பவ்யமா கையக்கட்டிகிட்டு 'நீங்க சொல்லுங்க, என்ன செய்யட்டும்'னு லுக் விடுவாங்க. அம்மா என்ன நினைக்கறாங்களோ, நாம அதச் சரியா செய்யணுமே அப்டி இப்டினு அவங்க மண்டைக்குள்ள ட்ரெயின் ஓடிகிட்டுருக்கும். அதுமாதிரி முருகனுக்கு சுப்ரீம் கோர்ட் வள்ளி தானே? அதான் அவ கால்ல விழறச்சேயே நான் இப்ப என்ன செய்யணும்னு சொல்லும்மான்னு ஆசையா கேட்கிறான் கந்தன். ஏன் இப்படி? பின்ன மனைவி சொல்றத கேக்கலேனா எப்படி. இராத்திரிக்கு தினைமாவு கிடைக்காதே. மேலோகத்துலேர்ந்து பாதாள லோகம் வரை அம்மாக்களோட பவர் பாயுது. இல்லியா? ஏன்னா, வள்ளி மேல அவ்ளோ அன்பு. தணியாத அன்பு. அன்பைக் காட்டறதுல எப்படிப் பட்டவன்? தயாபரன். கருணையே வடிவானவன்.

வள்ளியின் மேல் கொண்ட காதலினால் அவள் பதம் பணிபவனின் பாதத்தை நாம் பற்றுடன் பற்றினால் நம் கல்மனம் அவனாய் அவனருளால் தாமரையாய் மலரும். அப்படி மலர்வதில் தான் ஆச்சரியமும் உண்டோ?

Tuesday, March 07, 2006

5. சகமாயையுள் நின்று தயங்குவதேன்?

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

இதுவும் போன பாட்டோட தொடர்ச்சியாக கொள்ளலாம். அந்தப் பதிவில் மாயையினால் பந்தத்திலும் பாசத்திலும் மட்டுமே பற்று வைப்போருக்கு இறைவனடி நினைய தடையாக இருப்பதாய் பார்த்தோம். அதற்கு ஜெயஸ்ரீ அவர்களும் தி.இரா.ச அவர்களும் மேல் விளக்கங்கள் கொடுத்திருந்தனர். அதுவே இந்தப் பாட்டிலும்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
மகமாயைன்னா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மயக்கும் மாயைன்னு அர்த்தம். அதாவது இறைவனைக் காண நம் கண்களுக்கு தடையாய் இருந்து மறைக்கும் திரை. கண்களால்னா புறக்கண்கள் கிடையாது. ஏன்னா, அவற்றால் ஒருநாளும் அவனைக் காண முடியாது. இதையே தான் சில தினங்களுக்கு முன் (2. எனையிழந்த நலஞ்சொல்லாய்) பதிவில் பார்த்தோம், நினைவுக்கு வருகிறதா? இறைவன் தன்னைக் குறுக்கிக் கொண்டு சிலைகளாக நம் புறக்கண்களுக்கும், பின்னர் நமக்கு உண்மையான அன்பு அவன் மேல் வருகையில் பரம்பொருளாய் நம் அகக்கண்ணுக்கும் காட்சி தருகிறான். ஆனால், அம்மாதிரி அவனை புறக்கண்களால் காண்பது எளிது. கோயிலுக்கு போனால் பார்க்கலாம். ஆனால் அப்போதும் அவனைப் பார்க்காமல் காஸ் அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்று மனம் அலைபாயும். இத்தனைக்கும் அர்ச்சகர் மணியெல்லாம் அடித்து, கற்பூரம் எல்லாம் காட்டி எப்படியாவது நம் attention-ஐ இறைவன் மேல் திருப்பப் பெரும் பாடுபடுவார். அப்படியும் நாம் சொல்வதை கேட்டால் தானே நம் மனம்? மனம் ஒரு குரங்கு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அப்படி கண்முன்னே நிற்கும் கடவுளின் உருவத்தைப் பார்த்தாலும், அவனை உண்மையாக பார்க்க முடிவதில்லை. கண்முன்னே தெரியும் தெய்வத்தை காண்பதற்கே இவ்வளவு தடைகள் என்றால் அகக்கண்ணால் காணவேண்டிய தெய்வத்தைக் காண குறுக்கே எத்தனை விஷயங்கள் இருக்கும்? இதையே தான், கந்தர் அலங்காரத்தில்

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ள்வாய்


என்று சொல்கிறார். இருபுறமும் பற்றி எரியும் மூங்கில் கிளையின் நடுவில் சிக்கிய எறும்பதனைப் போல் இங்கும் மகிழ்ச்சியில்லாமல், உய்யவும் வழியில்லாமல் தவிக்கும் என்னுடைய துயரை அழித்தருளாயோ என்று. அதுபோல நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள். பற்றுகள். தளைகள். அப்படி இவ்வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு, எறும்பின் உய்விற்கு தடையாய் இருக்கும் நெருப்பைப் போல், தடையாய் இருப்பதில் முக்கியமானது மாயை. அதனூடாக பாசம், பந்தம் ஆகிய பற்றுகள். இப்படிப்பட்ட உலக மாயைகளை நொடிப்பொழுதில் களைந்திட வல்லவனான எம்பிரான்...

முகமாறு மொழிந்து மொழிந் திலனே
முகமாறு - தன் ஆறுமுகங்களைக் கொண்டும் மாயையைப் நாம் கைப்பற்றும் வழியைச் சொல்லியும் இன்னும் இந்த மகத்தான மாயையினை ஒழித்தழிக்க இயலாமல் தவிக்கிறேனே.

அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே.
அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் பெண்டிர். போன பதிவில் சொன்ன படியே இவற்றின் மேல் கொண்ட பற்றைப் பற்றியே அருணகிரியார் குறிப்பிடுகிறார். இவற்றின் மேல் கொள்ளும் பற்று எத்தகையானது? அயர்ச்சி தரக்கூடியது. அவ்வயர்ச்சியினால் என்ன தீமை விளைகிறது? புறக்கண்ணாலும், அகக்கண்ணாலும் இறைவனைக் காண முடியாத அளவுக்கு மன அயர்ச்சியும், உடல் அயர்ச்சியும் தரக்கூடியது இந்த பற்றுகள் எனப்படும் அடிமைத்தளைகள். இந்த அடிமைத்தளைகளே நாம் இந்த உலகத்தின் மாயையினில் சிக்கித் திண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இவ்வாறு தன் ஆறுமுகங்களில் இருக்கும் செவ்விதழ்களுடைய ஞான ஊற்றான அவன் வாயிலிருந்து உலக மாயைகளிலிருந்து தப்பித்துய்யும் வழியை முருகப்பெருமானே சொல்லியும், நான் இன்னும் உய்ய வழியில்லாமல், அவனை அடைய கதியில்லாமல் அலைகிறேனே!

இராகவனின் பதிவு

Wednesday, March 01, 2006

4. தளைபட் டழியத் தகுமோ?

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூர் ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)

அநுபூதிக்கு திருப்புகழ், அலங்காரம் இவற்றைவிடவும் சிறப்பு உண்டு. அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றென்றும் சொல்லுவோர் உண்டு. ஏனென்றால் சிக்கலில்லாத, எளிமையான பாக்களின் மூலம் மெய்ப்பொருள் தத்துவத்தையே வெறும் ஐம்பத்தியொரு பாக்களில் சொல்லியிருக்கிறார் அருணகிரி. இவை ஒரே சமயத்தில் ஒரு நூலாக எழுதப்பட்டதில்லை. மாறாக பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்டவை இந்தப் பாடல்கள். சரி இந்த அருமையான பாடலுக்கும் பொருள் பார்ப்போமா?

//கிளைபட் டெழுசூ ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே//
முருகப் பெருமான் சூரபத்மனை கொன்ற கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஒரு சின்ன recap பார்ப்போமா? சூரபத்மன் தோல்வியின் விளிம்பில் ஒரு மாமரத்தின் வடிவம் எடுத்தான். பல கிளைகள் விட்டு பரந்து வளர்ந்து மரத்தின் வடிவில் இருந்த சூரனையும்.. கிரியும் - இது க்ரௌஞ்சனைக் குறிக்கும். க்ரௌஞ்சன் என்பவன் சூரனின் தளபதிகளில் ஒருவன். அவன் மலை உருவத்தில் நின்றான். இந்த இரண்டு பேரையும் துளை விழும் அளவிற்கு வேலால் அடிக்கக்கூட வேண்டியிருக்கவில்லை. முருகனின் வேல் அவர்களின் மேல் பட்டவுடனேயே அவர்கள் அழிந்தார்கள்.

இப்படியும் எடுத்துக்கலாம். கிளைன்னா உறவுகள் னும் ஒரு பொருள் வரும். தாரகன், சிம்மமுகன் என்று இரு சகோதரர்களுடன் வந்த சூரபத்மனையும்..

கடைசியா.. இதுதான் இவ்வரிகளுக்கு உண்மையான பொருள். உறவுகளினால் வரும் சூரையும் (துன்பம்), ஆணவம் என்னும் நம்முள் வளர்ந்து நிற்கும் கிரியும் (மலை)யையும் அழிக்க ஞானமெனும் வேலை எறியவேண்டாம். தொட்டாலே போறும். எப்படி வேலால் தொடப்படுவது? அவனை நினைத்தாலே மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட வேலை உடைய வேலாயுதனே...

இப்போது புரிகிறதா? ஏன் அநுபூதியை உபநிஷத்துகளில் ஒன்றாக கருதுகிறோம் என்று. மேலோட்டமாக படிப்போருக்கும் பொருள் புரியும். அதுவும் நல்ல பொருள் தான். கொஞ்சம் படித்தோருக்கு இன்னும் தத்துவார்த்தமான பொருளும் உள்ளே அடங்கியிருக்கும். யாருக்கு என்ன லெவலோ அந்த அளவிலேயே, மெய்ப்பொருளை விளக்குபவர் அருணகிரிநாதர்.

//வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ//
இது ரொம்ப ஈஸி புரிஞ்சுக்கறதுக்கு.

வளைகள் நிறைய அணிந்த கைகளை உடைய மாது (மனைவி) மற்றும் மக்கள் - நம் குழந்தைகள். பெண்ணீயவாதிகள்லாம் அடிக்க வரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இதே வரியை 'தாலிகட்டு கையுடை பதியும்'னு இதைப் படிக்கும் பெண்கள் மாத்திக்கலாம். முக்கியம் பெண்களோ, ஆண்களோ, குழந்தைகள் இல்லை. பந்தம், பாசம் போன்ற தளைகள் தான். இராகவன் சொன்னது போலவே அடிமைத்தளையை நினைவில் வைத்துக்கொள்வோம். பெண்களோ, குழந்தைகளோ, திருமணம் செய்வதோ பிரச்சனையா? திருமணம் தான் பிரச்சனைன்னா முருகனைப் பாடிய நம் தமிழ் முன்னோர்கள் அதை இன்னமும் சடங்காக வைத்திருப்பார்களா? க்ருஹஸ்தர்களுக்கென்று முக்கியமான இடமும் வடமொழியை முக்கியமாக உடைய சமயங்களிலும் சொல்லிருக்கிறார்கள். case in point: சீதையின் தந்தை சீரத்துவஜ ஜனகன்.

மேலும், வாரியாரின் சொற்படி இறைவன் நமக்கு ஆசிரியனாக இருக்கவே மீனாஷியை மணம் புரிந்தான். ஏன்? விரல்விட்டு எண்ணுவது குழந்தைகளுக்கு எளிது. அதனால் ஆசிரியரும் விரல்விட்டு எண்ணிக்காண்பிப்பார். அதற்காக ஆசிரியருக்கும் விரல் விட்டு எண்ணினால் தான் இரண்டும் இரண்டும் எவ்வளவென்று தெரியும் என்று சொல்லமுடியுமா? அப்படியே முருகனும் வள்ளியையும், தெய்வானையும் மணந்தான். அப்படி அவனே மணவாளனாய் இருக்கையில் திருமணம் வேண்டாமென்று சொல்ல முடியுமா?

பிறகு ஏன் இப்படி அருணகிரி சொல்லுகிறார்? காரணம் இருக்கிறதே. மனைவியும் மக்களும் முக்கியந்தான். இதை கல்யாணமவர்களும் ஏன் ஆகாதவர்களும் உங்களில் புரிந்திருப்பீர்கள். கோயிலுக்கு போனால் கூட தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ, நம் மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பானா, மகன் தவறான வழியில் போகாமல் இருப்பானா, நம் மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா, அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா இப்படித்தான் கண்ணை மூடியவுடன் தோன்றும். இது தவறில்லை. ஏனென்றால் நம் நிலை அதான். இறைவனை நினைக்கக்கூட இவை (நினைப்புகள்) இடையிலே நிற்கும்போது அவனை அடையவும் முடியுமா? இவை முக்கியமில்லையா? முக்கியம் தான். ஆனால் அவைகளை விட முக்கியம் இறைவன். இப்படியாக இந்த உலகச் சழக்கைகளில் (materialistic என்றும் கொள்ளலாம்) சிக்கித் இறைவனை நினையாமல் இவற்றில் மட்டுமே அடிமையாக இருந்துவிடும் நிலை தகுமா? ஏன் தகுமோ தகுமோ என்று இருமுறை கேட்கிறார்? ஏனென்றால், கூப்பிடாமலேயே ஓடிவந்து அருளும் கருணைக்கடலான கந்தனை நினைந்தும் நான் இன்னும் விமோசனம் பெறாமல் இந்த அடிமைச் சங்கிலிகளில் சிக்கி சுழல்வது நியாயமா முருகா? இது உனக்கே அடுக்குமோ? இப்படி நான் இருப்பது உனக்குத்தானே இழுக்கு என்று emphasize செய்கிறார் அருணகிரியார்.

Monday, February 20, 2006

3. மெய்ப்பொருளாவது யாது?

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3


எளிமையான தமிழ். எல்லாருக்கும் புரியும் வகையில். ஆனா, எது மெய்ப்பொருள்? எப்ப அது புரியுங்கற முக்கியமான தத்துவத்தை சொல்கிறார் அருணகிரிநாதர். அது புரிஞ்சா போதும். வேறொன்னும் தேவையில்லை. சரி, ஸ்கூல் தமிழ் வகுப்பு ஸ்டைல்ல பார்ப்போமா? யார்கிட்ட என்ன கேக்கறார்?

சண்முகனே - ஆறுமுகத்தோனே!

வானோ - ஆகாசமோ?

புனல் - நீர் நிலைகளோ?

பார் - இந்த உலகமோ?

கனல் - நெருப்போ?

மாருதமோ - காற்றோ?

ஞானோதயமோ - ஞானம் (விஷய) பெறும் நேரமோ?

நவில்நான் மறையோ - எல்லாரும் படிக்கும் நான்கு வேதங்களோ?

யானோ - நானா?

மனமோ - என் மனமா?

எனையாண் டவிடந்தானோ - இந்தப் பாட்டுலேயே முக்கியமானது இதுதான்.

ஆறுமுகா. மெய்ப்பொருள்னா என்ன? பஞ்ச பூதங்களா? இருக்க முடியாது. ஏன்னா, பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அதிபதி நீ தானேப்பா. உனக்குள்ள அடங்கற விஷயங்கள் மெய்ப்பொருளா இருக்க வாய்ப்பில்லை. அதே மாதிரி தான் வேதங்களும், ஞானமும். அவையும் உனக்குள்ள அடங்கிடும். நான்? 'நான்'கறத விட்டதால தானே எனக்கே மெய்ப்பொருளச் சொன்னாய். ஸோ, அதுவா இருக்க சான்ஸில்லை. என் மனமா? அதுக்கும் வாய்ப்பில்லை. ஏன்னா, போன பாட்டுல பார்த்த மாதிரி மனசுக்குள்ள கட்டுப்படறது பரம்பொருள் அல்ல. அதனுடைய ஒரு சின்ன அம்சமே. சரி அப்ப எதுதான் மெய்ப்பொருள்? எங்க தான் இருக்கு?

எனையாண் டவிடந்தானோ தான் இங்க முக்கியம். தானேன்னு சொல்லிருக்கணும். புதிரா இருக்கட்டுமேன்னு தானோன்னு சொல்லிட்டார் அருணகிரி. ஒருவேளை அவருக்கும் சந்தேகம் இருந்ததோ என்னவோ? ஆனா அநுபூதி எழுதுனவருக்கு சந்தேகம் வருமா? எவ்வளவு பெரிய ஞானி அவர்? மிச்ச எல்லாத்துக்கும் இல்லாம எனை ஆண்ட இடத்துக்கு மட்டும் 'தானோ' போட்டுருக்கார்? ஏன்னா, இதுல இடம் கறது physical location அ குறிக்கவில்லை. மாறாக என்னை நீ ஆட்கொண்ட சமயம்னு (event) பொருள் கொள்ளலாம். ஆட்கொண்ட சமயம்னா என்ன? போன பாட்டுல பார்த்தோமே. "என்னை யிழந்த நலம்" அதுவே தான். அதாவது நானென்பது மறைந்து பரமாத்மாவோடு ஒன்றாக கலக்கும் சமயம். அந்த நிலை. மெய்ப்பொருள்னா என்னன்னு அப்பதான் புரியும். மிச்ச எல்லாமே காலத்தால் அழிய/மாறக்கூடியவைன்னு சொல்றாரு. இதுல பொருளாவது சண்முகனேன்னு சொன்னாலும், அதாவது இதுதான் பொருளா சண்முகான்னு கேள்வி கேட்டாலும்: கேள்வி கந்தனுக்கில்லை. நமக்கே.

ஜிராவின் பதிவு

Tuesday, February 14, 2006

2. எனையிழந்த நல்ஞ் சொல்லாய்

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா சுரபூ பதியே. (2)

உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனு நீயலையோ?
எப்போதும் சந்தோஷமா, கவலைகளே இல்லாம இருக்கறவன் முருகன். கவலையா இருக்கும்போது முருகனோட பிம்பத்த நினச்சு பாருங்க. பன்னிரண்டு கை ஆறுமுகனோ, இல்லை கோவணத்தோட நிற்கும் பழனியாண்டியோ. உங்களுக்கு எந்த உருவம் பிடிக்குமோ அதை நினைச்சுக்கலாம். தெளிவு கிடைக்கும். அமைதி வரும். சும்மா ஒரு ஆபீஸ்ல மேனேஜருக்கே எவ்வளவு கஷ்டம். நம்ம ஜோசப் சார் 'திரும்பிப் பாக்கறேன்' படிச்சீங்கன்னா புரியும். எத்தன பேர்னால எத்தன பிரச்சனைகள். அப்படி பாத்தா, முருகன் யாரு? அண்டசராசரங்களும் அதிபதி. எல்லாதுக்கும் CEO அவன்தான். சுரபூபதி. இதுக்கு ஜிரா ஏற்கனவே சொல்லிட்டார். அதாவது தேவர்களின் தலைவன். அவர்களின் சேனாதிபதி. அவங்களோட மாப்பிள்ளை. அவன் எப்படி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கான்? எப்படி எப்பவும் கோவமோ எரிச்சலோ படாம யோக நிலையில் இருந்துகிட்டு இதமா, பதமா அடியார்களுக்கு அருளுகிறான்? அதுக்கு அடுத்த வரிகளை படிச்சா புரியும்.

எல்லாமற என்னை யிழந்த நலஞ்சொல்லாய் முருகா சுரபூ பதியே
முருகன குழந்தைன்னு சொல்றோம். அப்படித்தான் பாக்கறோம். நினைக்கறோம். சிலைகளா வடிச்சி வெச்சுருக்கோம். அவனும் அப்படிதான் வந்து பழநி ல நிக்கலையா? ஏன் குழந்தை? ஏன் குமரன்? உருவமும் அரூபமும் எல்லாமுமாய் பிரகாசிக்கும் பரமாத்மாவுக்கு கையும், காலும் வரைஞ்சு நாம எளிதா identify பண்ணிக்கறா மாதிரி முருகனுக்கு உருவம் கொடுத்து வச்சிருக்கோம். அவ்வளவு தான். தெய்வத்தை புரிஞ்சுக்கறதுல ரெண்டு வகை இருக்கு. இதுக்கு பரமாச்சாரியாள் அழகா விளக்கம் சொல்லுவார்.

கடவுளை எப்படி புரிஞ்சிக்கிறது? பக்தி மூலமா மட்டும் தான் முடியும். ஆனா, எதுமேல பக்தி வைக்கணும், என்னன்னு பக்தி வைக்கணும்னு தெரியாம எப்படி பக்தி பண்ணுவது? இது ஒரு contradiction, இல்லியா? அதுக்காக Starter Kit மாதிரி தான் முருகன், கண்ணன், சிவன், பார்வதின்னு ஒரு உருவம் கொடுத்து, அதுல நமக்கு எது பிடிச்சிருக்கோ அதுமேல பக்தி பண்ணலாம். ஒண்ணுமேயில்லாம எப்படி செய்யறது? பக்தியில் சில நிலைகள் இருக்கு. முதல் நிலைதான் நம்முடையது. அதாவது, நான் வேறு கடவுள் வேறு பூதங்கள் வேறு என்று பிரித்து இதில் 'நான்' முக்கியமாக போய்விடுகிறது. இந்த 'நான்' இருக்கறவரைக்கும் உண்மையாக கடவுளை, அவன் தத்துவத்தை அறிய முடியாது. நான் இருக்கறவரைக்கும் பஞ்சபூதங்களால் ஆனது மட்டும் தான் புரியும், தெரியும் நமக்கு. அதனாலேயே, நம்ம மேல இருக்கற ஆசையினால இப்படி எளிதா புரிஞ்சிக்கறா மாதிரி பரமாத்மா தன் மாயையினாலே எளிய, சிறிய வடிவங்களில் நம்முன் வருகிறது. ஏன்னா, குறைஞ்சு வராமல் போனால் அவருடைய முழு சுவரூபத்தை நம்மால் comprehend பண்ண முடியாது. நம் அறிவு அவ்வளவுதான்.

எளிய உதாரணம். நிறைய பேர் உங்க டேபிள்ல globe வச்சுருப்பீங்க. அது இந்த உலகத்தோட desktop version. நமக்கு எளிதா புரியறதுக்காக simplify பண்ணி வச்சுருக்கோம். அதுவே உலகமாகாது. அதுவே உலகம்னும் நினைக்கமுடியாது. அதே மாதிரி தான். கிருஷணனை யசோதா உரலில் கட்டிப்போட்டாளா? அவ கட்டிப்போட்டது வேதங்களின் சாரம், உபநிஷத்துகள் பேசும் தத்துவம் மற்றும் எல்லாம் இருப்பதுவும் இல்லாததுமாக இருக்கற பரமாத்மாவா? அவ்ளோ பெரிய பரமாத்மாவை வெறும் உரலில் கட்டிப்போட முடியுமா? முடியாதில்லியா? அப்புறம் எப்படி கண்ணனைக் கட்டிப்போட்டாள்? உபநிஷத்துகளின் தத்துவத்தை கட்டிப்போட முடியுமா? ஏன் கட்டிப்போட முடிஞ்சதுன்னா, வந்தது முழு ரூபம் இல்ல. தன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட சுயரூபத்தை சின்னதாக நமக்கு புரியும் வகையில் தன்னைக் குறுக்கிக்கொண்டு வந்ததால் தான் கட்டிப்போட முடிந்தது. அது மாதிரி 'நான்' இன்னும் இருக்கும்வரையில் நம் மனசுக்குள் பூரணமான பரமாத்மாவைக் கட்டிப்போட முடியுமா? முடியவே முடியாது. நாம் அவனை பார்க்கவேண்டும் என்கிற ஆசையினால் தன்னைக் குறுக்கிக்கொண்டு, நமக்கு புரியும் வகையில், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் வந்து காட்சி தருகிறான் இறைவன். நம்மால் கட்டிப்போடக் கூடிய குட்டி சைஸில் வந்து நம் மனதில் உக்கார்ந்து கொள்கிறான். இது ஆரம்ப நிலை. இந்த நிலையில் கடவுள் மேலும் அன்பு உண்டு. மற்ற worldly விஷயங்களிலும் அன்பு சம அளவில் இருக்கும்.

அடுத்த நிலையில், மற்ற அன்புகள் மறைந்து முழுமையாக இறைவன் மேல் மட்டுமே அன்பு வைத்தால், 'நாம், நான்' என்பதெல்லாம் மறைந்துவிடும். 'ஆஹா, இத்தன நாள் உன்னை இதுன்னு நினச்சேனே. நீயாரு, உன் தத்துவம் என்ன என்று புரிகிறதே' என்று பாடத்தோன்றும். பரமாத்மாவோடு முழுமையாக கலந்துவிடும் உன்னத நிலையது. அவனுடைய தத்துவம் புரியும் சரி, அப்ப என்ன விசேஷமா புரியும்? பார்க்கறதெல்லாம் பரமாத்மா என்ற தெளிவோடு, பார்க்கிறதும் பரமாத்மா என்று புதிதாக புரிய வரும். கடலில் மிதக்கும் ஐஸ்கட்டி மாதிரி தான் நாமும் இருக்கிறோம்னு புரியும். அது என்னிக்கு புரிகிறதோ, நான் என்பது மறைந்து, ஐஸ்கட்டி உடனே பரமாத்மா என்னும் கடலில் கலந்துவிடும். அப்படி கரைஞ்சவர் அருணகிரிநாதர். அதைத்தான் "எனை இழந்த நலம்"னு சொல்றார். அவருக்கு புரிஞ்சுடுச்சு. ஆனா, அடுத்தவங்களுக்கு, நம்மளப் போன்ற சாமானியர்களுக்கு எப்படி விளக்கறதுன்னு நீயே சொல்லிடுப்பா முருகான்னு முருகன் கிட்ட சொல்றாரு.

Monday, February 06, 2006

10. உவட்டாமல் இனிப்பதுவே!

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.


போன பதிவில எப்படி இறைவனை வணங்க வேண்டுமென்று வள்ளலார் சொல்லியிருந்தார் என்று பார்த்தோமில்லியா? இந்தப் பாட்டுல பாருங்க. இறைவனப் பாடினா எப்படி இனிக்கும், எப்படி சுவைக்கும்னு உவமைகள் சொல்றாரு. அந்த அநுபவத்திற்கு ஈடு இணை கிடையாதுன்னாலும், எப்படி இனிக்கும்னு நமக்குப் புரியறா மாதிரி தோராயமா சொல்றார்.

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
இதுக்கு ரெண்டு விதமா பொருள் எடுத்துக்கலாம். ஆனா, அடிப்படைக் கருத்து ஒன்றே.

வானில் கலந்திருக்கும் மாணிக்கம் போன்ற விலைமதிக்க முடியாதவனே, அளவறிய முடியாதவனே உன் அருளால் நமக்குக் கிடைக்கப்பெற்ற திருப்பாடல்களை...

இன்னொன்னு, மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார்னு தமிழில் ஒரு சொலவடை கூட இருக்கே. அப்படி எத்தனை கனமான மனதையும் உருக்கக்கூடிய தன்மையைப் பெற்றது திருவாசகம். அது இறைவனைப் பற்றியே பாடுவதாலே தான் அத்தனை சிறப்பு. அம்மாதிரி இறைவனைப் பாடி அவனோடவே இரண்டறக் கலந்த மாணிக்கவாசகா! உன் திருவாசகத்தை நான் படிக்கும்போது...


நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
நான் என்னை மறந்து அவனுடன் கலந்து திருப்பாடல்களை (or திருவாசகத்தை) பாடும்போது எப்படி இருக்கு? கருப்பஞ் சாறுன்னா கரும்பு ஜூஸ். நம்மூர் திருவிழாலேலாம் பாத்தா நீலக் கலர்லே ஒரு மஷின் இருக்கும். அதுல கரும்ப இந்தப் பக்கம் உட்டாக்க, அந்தப் பக்கம் ஜூஸா வரும். கரும்போட சுவை எப்படி இருக்கும்னு சொல்லனுமா என்ன? எல்லா கரும்பும் நல்ல கரும்பில்ல. சிலதுக்கு ஸ்பெஷல் டேஸ்ட் இருக்கும். மலைப்பழம், ரஸ்தாளின்னு நாம தேடிப்போய் வாங்கறதப் போல. இல்ல? வெளிநாட்டுல கிடைக்கற, ஈக்குவேடார் ப்ரேஸிலேர்ந்து வர்ற வாழைப்பழமெல்லாம் பெரிசா இருக்குமே தவிர நம்மூர்ல கிடைக்கற அளவிற்கு சுவையா இருக்காது.

அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸோட...


தேன்கலந்து பால்கலந்து செழுஞ்கனித்தீஞ் சுவைகலந்
கரும்பு ஜூஸே இனிப்பா இருக்கும். ஆனா அந்த இனிப்பு இறைவனப் பாடும்போது கிடைக்கும் இனிப்புக்கு இணையாகாதாம். அதனால அந்த மாதிரி நல்ல கரும்பு ஜூஸுலே தேன் கலந்த மாதிரி இருக்கு. தேன் மட்டுமா? நல்ல அருமையான கெட்டி எருமைப் பாலையும் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு. இதுவே திகட்டும்னு நினைக்கறவங்கள பார்த்து கிண்டல் செய்யறா மாதிரி கரும்பு ஜூஸ், தேன், பாலோட சேர்த்து உலகத்துல இருக்கற அத்தனை சுவையான பழங்களையும், அவற்றின் சுவைகளையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கறார். படிக்கறத நிறுத்திட்டு வள்ளலார் சொல்ற cocktailஓட திதிப்பு எப்படி இருக்குமுன்னு ஒரு நிமிஷம் கற்பனை பண்ணிப்பாருங்க. திகட்டுதில்ல?

தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
இதோட நிறுத்திட்டா எப்படி? பாடும் போது அவரோட உடலும், உயிரும், ஆன்மாவும் கலந்தில்ல பாடுது? அதத்தானே போன பதிவில சொன்னாரு. இத்தனை இனிமையான விஷயங்கள் கலந்தா மாதிரி இருக்கு. சுடச்சுட ஜாங்கிரி பண்றாங்கன்னு வச்சுக்கோங்க வீட்ல. ரொம்ப பிடிக்கும்னு சொல்லி எவ்வளவு திம்பீங்க? அஞ்சு ஆறுக்கு மேல உள்ள போகாதில்லீயா? ஏன்னா, எவ்ளோ தான் புடிக்கும்னாலும் திகட்டிப்போயிடும். அளவுக்கு மிஞ்சினால்னு நம்ம மக்கள் சொல்லி வச்சுட்டு போயிருக்காங்களே. ஆனா, இதெல்லாம் சேர்த்து இவ்ளோ இனிமையா இருக்குது உன்னப் பத்திப் பாடறது. ஆனாலும், எவ்வளவு இனிமை, திதிப்புன்னு சொன்னாலும் திகட்டாமல் இனிச்சிகிட்டே இருக்கே உன் பாட்டெல்லாம்னு சொல்றார்.


-------
இந்தப்பாட்டும் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும். இதே போல இன்னொரு பாட்டும் இருக்கு. அதுதான் அடுத்தது. ஸ்கூல்-ல படிக்காம போனவங்களே கிடையாதுன்னு சொல்லலாம்னு வச்சுக்கங்க. ஈஸியா guess பண்ணலாம். யாராவது பண்றீங்களான்னு பார்ப்போம்.

Thursday, February 02, 2006

9. அனுபவங்காண் பெருந்தகையே!

வள்ளலாரின் பிரபலமான பாடல்களில் ஒன்று இது. நம்மில் பெரும்பாலானோர் பள்ளிநாட்களில் இப்பாடலை மனப்பாடம் செய்திருப்போம்.

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.

தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
பரமேஸ்வரனின் புகழ்ப்பாடும் பாட்டெல்லாம் பொதுப்பாட்டே. புதுப்பாட்டே என்று முன்னர் பார்த்தோம். அவை திருப்பாட்டும் அல்லவா? இங்கு திரு என்பதற்கு புனிதமான என்று அர்த்தம் கொள்வோம். அவனைப் பாடும் பாட்டுகள் எத்தகையவை? பொதுவாகவே, ஒரு மனிதரைக் குறித்த பாட்டைவிடவும் இறையின் மீது பாடப்படும் பாடல்களுக்கு சுவை அதிகம். இந்த ஒப்பீடே தவறு என்று நீங்கள் சண்டைக்கு வரலாம். ஆனாலும், வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள உதவும் என்பதால்.

'என் தலைவா, நீ இருக்க எனக்கு என்ன கவலை? என் மன்னவா, உன்னை இந்த நாடே போற்றுதே!' என்று இளையத் தளபதி விஜயைக் குறித்து பாடலாம். அப்படி பாடல்கள் வந்தும் உள்ளன. இவர் தமிழ்சினிமாவின் இளையதளபதி. இன்னொரு இளைய தளபதி இருக்கிறான். அவனே அண்டசராசரங்களுக்கும் உண்மையான இளைய தளபதி. வேறு யார்? என்றும் இளையவனான தேவசேனாதிபதியான முருகனே. ஒருவர் மேல் பாடப்படும் பாடலை ஒரு வரிகூட மாற்றாமல் மற்றவர்க்கும் பாடமுடியும். மேற்சொன்ன உதாரணப் பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். அது விஜயின் அடுத்த படத்தில் அதிரடி எண்ட்ரி பாடலாக இருக்கலாம். அல்லது, கோயிலில் முருகனை நினைத்து இட்டுக்கட்டியும் பாடலாம். இல்லையா? ஆனால், எது தித்திக்கும்? பக்தியுடன் பாடப்படும் கந்தனைக்குறித்த பாடலே தித்திக்கும் என்ற முடிவுக்கு வர சிந்திக்கவும் வேண்டுமா? ஏன் என்ற கேள்வியும் வருகிறதல்லவா? காரணம் ஒன்றுமில்லை. இறைவனின் திருநாமங்களையும், அவன் புகழையும் பாடும்போது அவனின் அருளையும் இயல்பிலேயே அப்பாடல் பெற்றுவிடுகிறது. சுருதிச் சுத்தமாக பாடவேண்டுமென்பது கூட இல்லை. பஜனைக் கோஷ்டிகளை கேட்டிருக்கிறீர்கள் தானே? ஆளாளுக்கு ஒரு கட்டையில் பாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தும் காதுக்கு இனிமையாகத்தான் இருக்கும். அதுவே இறைவனின் கடாக்ஷம். பாடல் சுத்தமான சங்கத்தமிழில் இருக்கவேண்டுமென்பதும் இல்லை. 'பழம் நீயப்பா', 'திருச்செந்தூரின் கடலோரத்தில்' ஆரம்பித்து அண்மையில் வந்த 'அன்பென்ற மழையிலே' வரை இதைக்காண முடியும். விஷயத்தை விட்டு ரொம்ப தூரம் போய்விட்டோமென்று நினைக்கிறேன்.

அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..

நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நான் பாடும்போது என்னையே பக்தியில் மறந்து எனக்கே நான் யார் என்று அறியாத ஆனந்த நிலையில் மூழ்கிவிடுகிறேன்.

நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
நா என்றால் நாக்கு. ஒலி வருவது நாக்கிலிருந்துதான். ஆனால் என் நாக்கு ஒன்று மட்டுமா உன்னைப் பாடுகிறது? இல்லை என் ஊனின் (உடல்) ஒவ்வொரு அணுவும் உன் புகழ்பாடுகிறது. என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.

உயிர்க்குயிரும் தான்படிக்கும்
உயிருக்குயிர் என்பது என்ன? நம்ம ஆன்மாவே. அது இல்லாமல் உயிர் என்பது இல்லை. நமது உயிருக்கு ஆதாரமானது ஆன்மா. நம்மின் உள்ளுக்குள்ளே இருந்து நம்மை ஆட்டிவைப்பது அதுவே.

மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.

அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே
உடல், உயிர், ஆவி கொண்டு நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? கண்டருள மாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.

----
அம்மாதிரி தினந்தோறும் தேனினும் இனிய அமுதம் போன்ற உன் புகழ்போற்றும் பாடல்களைப் பாடும்போது..
என் உள்ளம் உன்னையே நினைத்து நாவோடும் உடலோடும் சேர்ந்து உன் திருப்பாட்டை படிக்கிறது.
மேற்சொன்னவற்றோடு, என் ஆத்மாவும் சேர்ந்து உன் புகழ் பாடுகிறது.
நான் அடையும் இந்த பேரினிய அனுபவம் நீ காணமாட்டாயோ? தனிப் பெருந்தகையே. ஈடு இணையில்லாத கருணையை உடையவனே.
----

இப்பாடல் மூலம் வள்ளலார் தான் அனுபவிப்பதை இறைவனுக்கு சொல்வதாய் பாடி, நம்மைப் போன்றவர்களுக்கு இறைவனின் பாடல்களை எத்தனை சிரத்தையுடன் எப்படி அவனிடமே ஊன்றிப்போய் பாட வேண்டும் என்று சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பது போல் எளிதாக விளக்குகிறார். நாளைக்கு இறைவனின் திருப்பாடல்களை பாடுகையில் எப்படி இனிக்கிறது என்று சொல்லுவார். அது என்ன பாட்டுன்னு யூகியுங்களேன். நிறைய பாடல்கள் இருக்கிறதே.

Wednesday, February 01, 2006

8. பாடும் பணியே பணியா யருள்வாய்!

ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. (1)

//ஆடும் பரிவே லணிசே வலெனப்//

இதுல பரியென்று மயிலைத்தான் குறிப்பிடுகிறார் அருணகிரியார். பரின்னா குதிரையாச்சே? ஏன் மயில்னு சொல்றார்னு நானும் குழம்பியியிருந்தேன். ஆனால் நம்ம ஜிரா அழகா சொல்லிட்டாரு. அழகிய நடனமாடும் மயில். முருகப்பெருமானின் மயில் என்ன வகை நடனமாடும்? தஞ்சாவூர் கோயிலைப் பார்த்தவர்களுக்கு விளக்கவே வேண்டாம். ஓம் எனும் மந்திரத்திற்கு ஒப்ப வடிவில், அந்த சூட்சும மந்திரத்தையே விளக்கும் வகையில் ஆடும் மயிலும்...

முருகன் தன் சின்னமாய் அணிந்திருக்கும் சேவலின் வேலை எத்தகையது? அவனையே நினைத்துருகும் அன்பர்களுக்கு அவன் அருள் கிட்டியது குறித்து கொக்கரித்து அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். கொஞ்சம் சிந்திப்போமாயின் (அதான், என் கற்பனை!)

தினமும் காலைல சேவல் கூவுதே, எதுக்கு? 'மனிதர்களே கேளுங்கள்! முருகனின் அருள் உங்களை என்றென்றும் காக்கும்' என்று சொல்வதற்கே. ஏன் அருள் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவாய் பின்னே கொக்கரிக்கிறது? 'முருகன் அருள் பெறுவதொன்றும் கஷ்டமான காரியமில்லை. உங்க ஊரிலேயே நிறைய பேர் பெற்றிருக்கின்றனர்.' அதனால, அவங்களை எழுப்புற சாக்குல.. முருகன் தாளை நினைக்காதவங்களுக்கும் அறைகூவலாய் முருகனைப் பணிந்து நற்கதி அடையுங்கள் என்று தினந்தினமும் காலையில் நமக்கு சொல்கிறது சேவல். தன்னைப் பணிந்தோர் மட்டுமன்றி, மற்றோரும் தம்மை நாடி நற்கதி அடையவேண்டும் என்ற கந்தனது அளவற்ற கருணையே அதற்கு காரணம். (இதற்கும் குமரனும் தி.இரா.சவும் வேறு அழகிய விளக்கங்களை இராகவனின் பதிவில் சொல்லியிருக்கின்றனர்)

மேலும் சேவல்-சேவகம்-சேவகன் என்பது போன்ற சொற்களிலிருந்து அடிப்படை பொருளை அறிந்து கொள்ளலாம். முருகனுக்கு சேவகம் என்பதே கருத்து. இவற்றிற்கு மூலம் எல்லாம் ஆராயாமல், மேலோட்டமாக பார்க்கையில் தோன்றுவதைத்தான் எழுதுகிறேன்.

இப்படி ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..

பாடும் பணியே பணியா யருள்வாய்
இப்படி முருகனுக்கு சேவகம் புரியும் மயிலும் சேவலும்.. இதில் சேவல் யார்? சூரபத்மனின் நீட்சியல்லவா? தன்னை எதிர்த்து சண்டை போட்டவனேயே தன் பக்கத்தில வச்சுக்கறவர் நாம பக்தியோட தினமும் அவர் புகழ் பாடுனா வேணாம்னா சொல்லப் போறாரு?

என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...

'நின் இணையடிகள் மறவாத மனம் மாத்திரம் எனக்கடைதல் வேண்டுமரசே' என்று அடிகளார் கூட இதே போன்ற கருத்தை உடைய பாடலை பாடியிருக்கிறார். எத்தனை பிறவியெடுத்தாலும் நல்லது/கெட்டது,செல்வம்/வறுமை எதுவந்தாலும் உனை மறவாத நிலையொன்றை மட்டுமே வேண்டுவேன் என்று. அதுபத்தி விரிவா இன்னொரு நாளைக்கு.


தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே
கயமா முகன்னு அருணகிரிநாதர் சொல்றது ஒரு நல்ல கதை. கஜமுகாஸுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். பல அசுரர்களைப் போல early days இல் சிவனைக்குறித்து கடுந்தவம் புரிந்தான். அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழின்னு சொல்லிருக்காங்களே. முருகனின் கருணையெல்லாவற்றிற்கும் ஊற்று அந்த பரமேஸ்வரனே அல்லவா? சர்வேஸ்வரனும் கஜமுகாசுரன் கேட்ட வரங்களை அளித்தார். ஒரு விஷயம், சிவபெருமான் வரம் கொடுக்கும் விஷயத்தில் கொஞ்சம் மக்குன்னு நம்ம புராணங்கள கேட்டாலே புரிஞ்சிக்கலாம். எவ்வளவு மோசமான வில்லன் கேரக்டர் வந்தாலும், அவனுக்கு இவ்ளோ சக்தி கொடுத்தா அடுத்து அவன் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சும், நமச்சிவாயன்னு நாலுவாட்டி சொன்னா "பக்தா உன் பக்தியை மெச்சினோம். கேள், என்ன வேண்டும்?"னு கேட்டுக்கொடுத்துட்டு போயிடுவார். அப்புறமா யாராவது இப்படி செஞ்சிட்டேங்களேன்னு அவர்கிட்ட போய் அழுதா, 'எல்லாம் என் விளையாட்டு'ன்னு ஒரு பிட்டு போட்டுடுவார். இராவணன் தொடங்கி பல அசுரர்கள் குதியாட்டம் போட்டதுக்கு காரணமே சிவனின் வெள்ளை மனம் தான். (இது விளையாட்டுக்காக சொல்வது. பிரணவத்தின் தத்துவமான அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?) அதேமாதிரி, பெரும்பாலான அசுரர்களைப் போல பின்னாளில் தன் பலத்தின் போதை தலைக்கேறி தேடித் தேடிச் சென்று முனிவர்களையும் அவர்களின் தவங்களையும் அழிக்க, கஜமுகாசுரனை ஒழிக்க சிவபெருமான் பிள்ளையாரை தன் கணங்களோடு (அவர்தான் கணபதி ஆயிற்றே) அனுப்பினார். பிள்ளையார் பற்றி பல்வேறு கதைகள் உண்டென்றாலும்... க.மு.அசுரன்(:)) சிவபெருமானிடத்து பெற்ற வரத்தின் படி எந்தவொரு ஆயுதத்தாலும் அழிக்கமுடியாதவனாய் இருந்தான். அதனாலேயே விநாயகர் தன் வலது தந்தத்தை உடைத்து அதைக்கொண்டு அவனைக்கொன்றார் என்று ஒரு கதை. விநாயகரின் வரலாற்றில் பல வித கதைகள் உண்டு. இந்துமதத்தின் பிதாமகரான வேதவியாசர் பாரதத்தை எழுதச் சொன்ன போது தன் தந்தத்தை உடைத்து எழுதினார் என்றும் ஒரு கதை உண்டு. எதுவாகினும்....

நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!

----
நல்லோர்களைத் தேடிச் சென்று தொல்லைக் கொடுத்த கஜமுகாசுரனை, சிவனின் ஆணையால் அழித்தொழித்த யானைமுகத்தானின் சகோதரனே!
ஆடிடும் மயிலையும் வேலையும் சேவலையும் அணிந்திருப்பவனே..
என்றென்றும் உன்னைப்பாடும் பணியே என் வாழ்வின் தலையாய பணியாய் அருள்வாய்...


--
தமிழ்மணத்தில் சேர்வதற்கு முன் கருத்துள்ள (!) மூன்று நான்கு பதிவுகளாவது போட்டிருக்க வேண்டும் என்ற விதியால் நேற்றைக்கு ஏகப்பட்ட பதிவுகள் போட்டு ஓவர்டோஸ் கொடுத்துட்டேன். இதுக்கே உஷா அக்கா ஞே ன்னு விழிச்சதால, இனிமே தினமும் ஒரு பதிவுக்கு மேல போடப்போறதில்லை. :)

Tuesday, January 31, 2006

7. கந்தர் அநுபூதி - கடவுள் வாழ்த்து (காப்பு)

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!

//நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக்கு//
சின்னக் குழந்தைகளின் மனசை நாம் லேசானது என்கிறோம். ஆனால் அதுவே, விவரம் புரிந்தால்.. இதிலேயே எனக்கு ஒப்புதல் கிடையாது. விவரம் புரிகிறது என்றால் பரம்பொருளைக் குறித்த உண்மையைப் பற்றி அறியும் போதே விவரம் புரிவது என்றிருக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கு உலகம் தெரிவது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எது எப்படியாயினும்.. நமக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஆசாபாசங்கள், கோபம், குரோதம், பொறாமை, பேராசை போன்றவையே. அவர்களுக்கும் அவை உண்டு. ஆனால் அவை நம்முள்ளே சில வருடங்களுக்கு நிலைத்து நிற்குமென்றால், குழந்தைகளுக்கு சில விநாடிகளே இருந்து மறைந்துவிடும். எதற்கு குழந்தைகள் பற்றியென்றால்...

அருணகிரி சுவாமிகள் சொல்வது நாம் இவ்வுலக சழக்கைகளில் சுழன்று மனம் திரிந்து, ஆண்டவன் பிறப்பில் நமக்கு அளித்த லேசான மனத்தை இம்மாதிரி காமம், குரோதம் போன்றவற்றைக் கொண்டு பெரும்பாறாங்கல்லாய் வளர்த்துவைத்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவே.

ஆனால் இப்படி நாமே வளர்த்துவிட்ட / வளர்ந்துவிட்ட தீய மனதிற்கு உய்ய வழியுண்டா?

உண்டே. அதை உடனே அடுத்த வரியிலேயே சொல்லிவிடுகிறார். அருணகிரியாரே அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை தீயவற்றில் கழித்தவர். விலைமாதுக்களிடமும் மதுவிலுமே திளைத்திருந்தார். முருகனின் அருளென்ற ஒன்றில்லாமல் போயிருந்தால், இரத்தக்கண்ணீர் எம். ஆர். இராதாவின் கதாப்பாத்திரத்தை அருணகிரி வாழ்ந்தே காட்டினார் என்று சொல்லியிருப்போம். எப்படி ஒரு திருடனின் வாழ்க்கையை வால்மீகி வாழ்ந்து பின் இறையருளால் இராமாயணத்தைப் படைத்தாரோ அதைப் போலவே, அருணகிரியின் வாழ்க்கையில் முருகனின் இச்சைப்படி; தமிழ் நாட்டில் முருகனென்றால் அவனுக்கு அடுத்து அருணகிரியே நினைவுக்கு வரும்வகையில், அவருக்கு தன்னுடைய தன்னிகரில்லா கருணை மூலம், இரண்டாம் இடத்தை அளித்துள்ளான் கந்தன். நாமெல்லாம் அருணகிரி தன் முன்வாழ்க்கையில் இருந்த அளவு மோசமானவர்களாய் இன்னும் ஆகவில்லை (அவரைப் போல ஞானமும் பெறவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). ஆனாலும் அருணகிரியாரைப் போன்ற ஒருவருக்கே கந்தன் தன் அருளால் முக்தி அளிக்க வல்லவன் என்றால் அவன் கருணை எத்தகையான தொன்றாக இருக்க வேண்டும்? "Like Taking Candy From a Baby" என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ஒரு குழந்தையிடமிருந்து மிக எளிதாக ஒரு மிட்டாயை வயதில் முதிர்ந்தவர்களான நாம் அபகரித்து விட முடியுமல்லவா? அதே போல தான் குமரனும். ஆனால், இவனிடத்தில் கயமைத்தனம், அறிவுஜீவித்தனங்கள் எல்லாம் செல்லுபடியாகாது. அன்பென்ற ஒன்று மட்டுமே போதும். அதை முழுமையாய் அவனிடத்தில் வைத்தால் அவன் குழந்தையேதான். நம்மை நம்பி அருளிக் காத்தருள்வதற்கு.

'கந்தா, குமரா, முருகா' என்று சொல்லி முடிக்குமுன் வந்து அருள் செய்யும் ஆறுமுகத்தானுக்கு...

//கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே//
அவனுடைய பண்புகளை, கருணையை இந்த அழகிய தமிழ்சொற்களை கொண்டு நான் தொடுத்த இந்த எளிய பாக்களாலான மாலையின் புகழ் மேலும் மேலும் சிறந்திடவே...

//பஞ்சக் கரவானை பதம் பணிவாம்//
உங்களின் தம்பியை/தங்கையைப் பற்றி மூன்றாவது மனிதர் ஒருவர் உங்களிடம் வந்து புகழ்ந்தால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதமாய் இருக்கும்? உங்கள் மனம் எவ்வளவு குளிர்ச்சி பெறும்? முருகா, கந்தா என்ற சொற்களே தேன் போல இனிக்கையில், அவனைக் குறித்துப் உண்மையான பக்தியில் பாடப்படும் பாடல்கள் கசக்கத்தான் செய்யுமோ? இயற்கையிலேயே அமுதைப் போன்ற இனிமையை உடையவையாயினும் தன் அன்புத்தம்பியான குமரனைக் குறித்த இப்பாடல் மாலை மேலும் சிறப்புபெறவும் சுவைபெறவும் அருளுமாறு ஐந்துகரங்களை உடைய ஆனைமுகத்தானின் தாள்களுக்கு அர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் அருணகிரியார்.

இராகவனின் விளக்கம்

Monday, January 30, 2006

6. பித்தரென்று பெயர்படைத்தார்க்கு! - சமயச்சண்டைகள்

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
-இராமலிங்க அடிகளார்



சைவம் தவிர்த்து மனிதர்களுக்கு இன்னும் ஆறு முக்கிய மதங்கள் இருக்கின்றன. அவை...

வைணவம் - மாயவனான திருமாலைப் பரம்பொருளாய் வழிபடுவது.

கௌமாரம் - கந்தக் கடவுளை பரம்பொருளாய் கொண்டது.

சாக்தம் - சக்தியை வழிபடுவது

காணபத்யம் - கணங்களுக்கெல்லாம் அதிபதியான பிள்ளையாரை பிரதானமாய்க் கொண்டது.

சௌரம் - சூரியனை வழிபடுவது.

இவற்றையும் மசாலாவாய் இன்னும் சில schools of thoughts-களையும் தூவி கலந்த அவியலே தற்காலத்தில் நமக்குப் பரிச்சயமான இந்துமதம். இதில் சைவர்களை பொருத்தவரை ஆதிபரம்பொருள் சிவனே. அவனுக்கு பின்னரே மற்ற தெய்வங்கள். வைணவருக்கு நேரெதிர் கொள்கைகள். இந்த சமயச் சண்டையின் போது நடந்தது Spanish Inquisitionக்கு போட்டியாக இருந்திருக்கும் என்பது என் கற்பனை. ஏனென்றால் இருசாராரும் தம் கருத்துகளை மாற்றிக்கொள்ள, அல்ல மற்ற கருத்துகளை பொருத்துக்கொள்ளக்கூட முடியாத மனநிலையில் இருந்திருக்கின்றனர். இந்த சர்ச்சைக்குள் நாம் போகவேண்டாம். இது அதற்கான இடமன்று. மேலும், சிக்கலான ஒருவிஷயத்தை மிக அழகாய், நிதானமாய் கையாள்கிறார் அடிகளார்.



சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
நமது மனங்களில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் அங்கிங்கெனாதபடி ஆனந்த தாண்டவம் புரிகிறான் அந்த நாயகன். ஆனந்தத் தாண்டவம் புரிவது என்ற உடனேயே அந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்றவன் தானே நினைவுக்கு வருகின்றான். நடராஜப்பெருமான் இல்லாத இடமேது? அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு...



சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
சரி. அவன் சிவன் என்று சொல்லியாயிற்று. அதனால் மற்ற தெய்வங்கள் மட்டமானவர்களா? இல்லை அவனை விட உயர்ந்தவர்களா? இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்று சைவத்தின் பெருமைமட்டும் பாடும் அடியார்க்கு விளக்குகிறார் வள்ளலார். மற்ற சமயப் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்தாது என்றும் நினைப்பாயோ? அப்படி நீ நினைப்பின், சிவன் எங்கும் எதிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உனக்கில்லையென்று அர்த்தம். அது சிவனுக்கே செய்யும் அவமரியாதையல்லவா?

மற்றச் சமயக் கடவுள்களின் பெயர்கள் நம் நாயகனுக்கு பொருந்துமோ என்று அறியாமையால் கேட்கிறாய்...



பிறசமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
நமக்கென்று சமயம் ஒன்றிருந்தாலும், நம் சமயத்தை பின்பற்றாத மற்றவரின் கடவுளின் பெயரும் நமது கடவுளின் பெயரே என்று நினைக்க ஆரம்பிப்போமானால் மத மாத்சர்யங்கள் குறையத்தானே செய்யும். அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். முற்றிலுமாய் அதைப் புரிந்தவன் பரம்பொருளே. நமக்கு புரியக்கூடியதா இது? ஆனால் அடுத்தவருடைய தெய்வத்தையும் நம் தெய்வமாய் எண்ணி வணங்கவேண்டாம், துவேஷம் செய்யாமல் இருந்தாலே போதுமே. இல்லையா?

அதையே, மற்ற சமயக் கடவுளர்களின் பெயரும் நம் நாயகனின் பெயர்தான் என்று உணர்ந்துகொள்வாய் என்கிறார்.



பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயரொவ் வாதோ
திருநாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு முக்கிய சைவ நாயன்மார்களுக்கிடையில் சுந்தரருக்கு முக்கிய இடமுண்டு. மற்ற மூவருக்கும் சிவபெருமான் தெய்வம் என்ற நிலையிலேயே இருந்தார். ஆனால், சுந்தருக்கு? "பித்தா!" என்று சுந்தரர் இழிவாய் அழைத்தும் எம்பெருமானுக்கு கோபம் வரவில்லையே! ஒரு நண்பனைப் போலல்லாவா சுந்தரருடன் கலாட்டா செய்து விளையாடினார். அதுவே சுந்தரரின் சிறப்பு.

வள்ளலாரும் நகைச்சுவை பொங்கக் கூறுகிறார். ஒரு தெய்வத்தை 'ஆதி பரம்பொருளே, என் தாயே, தந்தையே, ஆட்கொண்டானே, குருவே' என்றெல்லாம் பெயரிட்டு கைகூப்பி, சிரந்தாழ்த்தி வணங்குவோம். ஆனால், நம் சிவனையோ ஒரு பித்தன் அதாவது வெறும் பைத்தியக்காரன், புத்தி பேதலித்தவன் என்றளவில் புகழ்ந்தாகிவிட்டது! அத்தகைய ஈனமான பெயரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட கருணைக் கடலல்லவா அவன்? பித்தன் என்றே அழைத்துமுடித்த பின், வேறெந்தப் பெயர்தான் இன்னும் மோசமாக இருந்துவிட முடியும்? மேலும், இந்த இழிசொல்லையே பெயராய், பக்தியாய் ஒப்புக்கொண்டவனுக்கு ஏனைய தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கசக்கவா போகிறது? அது அறியாமற்போய் பிற தெய்வப்பெயர்கள் சிவனுக்கு ஒவ்வாது என்று பிதற்றலாமோ?



அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே
அவ்வாறு வேற்று மத தேவர், அசுர, தெய்வப் பெயர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களாகிய உன் பெயரும் என் பெயரும்கூட அவனுக்கு பொருந்தாமல் போகுமோ? எல்லாமே அவன் பெயர்கள் தான்.



எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
மனிதன், தேவர், முனிவர், கடவுளர்கள் என்று மட்டும் ஏன் பார்க்கிறாய்? எல்லா மிருகங்களின், இவ்வுலகில் வாழும் செடி, கொடி, புழு, பூச்சி என அனைத்து ஜீவராசிகளின் பெயர்களும் அவன் பெயரே!



இதனை யார் உணர்ந்துகொள்வார்கள்?
சிற்சபையில் என்கணவர் செய்யும் ஒரு ஞானத்திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி
யாரொருவர், அண்டசராசரங்களிலும் என் கணவர் (இதில் பதி = அரசன்/துணைவன் என்றும் கொள்ளலாம்) நடத்துகின்ற தெய்வீக மாய நடனத்தை, அதிலடங்கியிருக்கும் பரமானந்தத்தை கண்டோரோ, அவன் அருளால் அதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தோரோ மட்டுமே அறிவர்.

5. நமச்சிவாயத்தை நான்மறவேனே!

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
      பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
      உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
      கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
      நமச்சி வாயத்தை நான்மற வேனே!

                                   -இராமலிங்க அடிகளார்


பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
தந்தை என்ற சொந்தத்தை விட தாய்க்கு இன்னும் ஒருபடி அதிக இடமுண்டு நம் வாழ்வில். ஏனென்றால் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்தவள் அவள். அதனாலேயே, தன் தாயை அவமதித்தவன், அவளுக்கு துரோகம் செய்தவன் என்று தீயவை செய்து தாய்ச் சாபம் பெற்றவன் இவ்வுலகில் நல்வாழ்க்கையும், மறுவுலகில் முக்தியும் அடையவே முடியாது என்று நம் பெரியோர்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள் (மகவு என்றால் குழந்தை பொருள் வரும். எனக்கென்னமோ மகன் என்றே அர்த்தம் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெற்றோருக்கு ஐம்பது வயது ஆண்மகனும் இன்னமும் குழந்தைதானே?). ஆனால், இம்மாதிரி தண்டனைகளுக்கு அஞ்சாமல் கூட தாயை மறப்பானெனினும்...

பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
முன்சொன்னதாவது நடக்கக்கூடிய ஒன்றானாலும், பெற்ற பிள்ளையை என்றாவது தாய் மறப்பாளா? மறக்கத்தான் முடியுமா? எப்பேர்ப்பட்ட கொடிய குணமுடைய பெண்மணிக்கும் தான் ஈன்ற பிள்ளையெனும் பொழுது, கருணை வரத்தான் செய்யும். அதனாலேயே முன்னால் கூறிய உதாரணம் நடப்பதும் அரிது. ஏனென்றால் ஒரு தாய் தன் பிள்ளையை, அவன் எவ்வளவு கொடுரமானவனாக இருந்தாலும், தனக்கு துன்பத்தையே இழைத்தாலும் சபிக்காமல் மன்னிக்கவே விரும்புவாள். ஆனாலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட உதாரணத்தை அடிகளார் பயன்படுத்துகிறார்.

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

இந்த உடலும் உயிரும் சக்தியும் சிவமும் மாதிரி. திருவிளையாடல்ல சிவனும் பார்வதியும் நல்லா சண்டையெல்லாம் போட்டு, சிவாஜி தாம்தூம் இரத்தச் சிவப்பு கண்களோட ஆட்டமும் போட்டு; பாம்பு, நெருப்பு ராக்கெட்லாம் விட்டு.. கடசியா சமாதானமாப் போவாங்களே. 'சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை'. அந்த மாதிரி இந்த நம் உயிராகிய ஆத்மா என்பது உடலாகிய மெய்யிலிருந்து பிரிந்து இந்த மண்ணுலகில் வாழமுடியாது. அதேபோல், மெய்யாகிய உடலும் உயிராகிய ஆத்மா இல்லாவிட்டால் வெறும் பிணம் தான். இப்படி இரண்டும் ஒருவர்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது. அப்போது இரண்டில் ஒன்று மற்றொன்றை மறப்பது என்பது சாத்தியமா? மறந்தாலும், இழப்பு இருவருக்கும் தானே.

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
ஒரு கலையைக் கற்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்? ஜாலியா கத்துகிட்டா பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பயின்று வந்தால் சாதாரண கலைஞனாகலாம். அவங்களால எளிதா மறந்துட முடியும். நானே அதுக்கு நல்ல உதாரணம். :)

ஆனா அதிலேயே மூழ்கி, வழி தவறாமல் கடுமையாய் உழைத்தால் தான் ஒரு கலைஞனாகலாம். அத்தகைய ஒரு கலைஞன், உதாரணத்துக்கு எம்.எஸ் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே. ஐம்பது ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்துக் கற்ற கலையை திடிரென்று ஒரு நாள் மறக்க முடியுமா? மறக்க நினைத்தாலும் தான் முடியுமா? ஏனென்றால் நம் இரத்தத்திலேயே ஊறிவிட்டிருக்குமல்லவா? இதில் கலை என்பது சாஸ்திரம், அறிவியல் என்னவேனா வச்சுக்கலாம். ஆனாலும், அந்த மாதிரி பலவாண்டுகள் கற்ற கலையை ஒரு கலைஞன் மறந்தாலும்...

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நம் உடலில் நடக்கும் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தலாம். ஆனால் மிகவும் conscious ஆக முயற்சி எடுத்து செய்யவேண்டும். மேலும், அவற்றை வீம்புக்காக தீவிரமாய் நிறுத்துவதால் பாதிப்புகளே உண்டாகும். மூச்சு, இதயத்துடிப்பு என்ற வரிசையில் கண் இமைப்பதும் வரும். நாம் நினைக்காமலேயே நம் கண்கள் தாமாகவே இமைகளை மூடி திறப்பதன் மூலம் காற்றிலுள்ள தூசு போன்றவை நம் கண்களை உறுத்தாமல் காத்துக்கொள்கிறது. இரண்டு நிமிடம் இமைக்காமல் இருக்க முயன்று பாருங்கள். உடனே கண்ணீர் வரும். அதுவும் தற்காப்பு முயற்சியே. ப்ளஷ் செய்வது போல நம் கண்ணீர் சுரப்பிகள் வேலை செய்வதன் பயனே கண்ணீர். இது மாதிரி, கண்கள் இமைப்பது என்பது அக்கண்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒன்று. அதைச் செய்ய கண்கள் மறந்தாலும்..

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
முனிவர்கள், கடவுளர்கள், தேவர்கள் போன்றவர்களை நற்றவத்தவர் என்கிறோம். ஏன் கடவுளர்கள்? பிரம்மா முதலிய பிற கடவுள்களும், இந்திராதி தேவர்களும் கூட பரம்பொருளை நோக்கி பல தவங்கள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அம்மாதிரி பெரும் தவவலிமை உடையோரின் நெஞ்சத்தின், ஆத்மாவின் உள்ளே ஓங்கிஉயர நின்று ஒளிதரும்..

நமச்சிவாயத்தை நான்மறவேனே!
மேற்கூறிய கொடுரமான, மிகைப்படுத்தப்பட்ட செயல்கள் எல்லாம் இயற்கையாய் நடந்தாலும், நமச்சிவாய மந்திரத்தை நான் என்றென்றும் மறவாமல் ஜபித்துக் கொண்டிருப்பேனே!


---
என்னடா ஆரமிச்சாலும் ஆரமிச்சான், வரிசையா போட்டுத்தாக்கறானேன்னு நினைக்கவேணாம். இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை கம்மி. அதான்... அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். பயப்படாதீங்க.

4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!

தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.

ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.

பாடியது: விஜய் சிவா

கேட்க

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்

திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!

கேட்டுப்பாருங்கள்.

---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [?].
----


என்னென்ன வேண்டும்

//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//

ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்

//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//

என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்

//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//

யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்

//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//

நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்

//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //

அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்

//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//

மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்

//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)தீங்குசொல் லாத்தெளிவும்//

அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்

//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//

உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?

//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//

சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!

//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//

தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!

3. புதுப்பாட்டா பொதுப்பாட்டா?

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே!

சன் டிவி புதுப்பாட்டு தெரியும். இது என்னடா இது பொதுப்பாட்டு அப்படீன்னு யோசிக்கறீங்களா? இருக்குதே விஷயம்.

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்


இந்த உலகத்துல இருக்கற அத்தனை உயிர்களும் நடராஜப் பெருமானாகிய நீ ஒருத்தனே ஆனந்த நடனமாடும் அரங்குகள் என்று அறிந்துகொண்டேன்.

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
(செயிர் னா கெட்டவை, முழுமையடையாதவை, குறைகளுடையவைன்னு பொருள் கொள்ளலாம்) அதாவது இந்த மாதிரி கெட்ட விஷயங்கள்லாம் தவிர்த்துவிட்டேன்.

திருன்னா செல்வம்னு தெரிஞ்சுருக்கும் இல்லியா? திருமகள்னு கூட சொல்றோமே மகாலட்சுமிய?

ஆனா, வள்ளலார் இங்க என்ன பொன்னும் மண்ணும் பெண்ணும் பத்தியா சொல்றார். திருன்னா ஆன்மிக செல்வம். பக்திங்கற செல்வம். ஆண்டவனின் அருள்கற செல்வம். இந்த மாதிரி என்னென்ன நற்பயன்கள் உண்டோ அத்தனையும் உன்னால அடைஞ்சிட்டேன்.

சித்துன்னா மாயை. உலக மாயையெல்லாம் புரிய வல்லவன் நீ என்று புரிந்துகொண்டேன்.

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து மலர்ந்தனன்
இப்படியெல்லாம் இறைவனை நினச்சா மயிற் கூச்செறிகிறதாம் அடிகளாருக்கு. என் உள்ளமெல்லாம் உன் அன்பினால் கனிந்து மலர்கிறதே.

சுத்தசன் மார்க்கப் பயிரெலாம் தழைக்கப்
சன் மார்க்கத்தப் பத்தி இன்னொரு நாள் பார்ப்போம். இப்போதைக்கு பொதுவான வழினு மட்டும் வச்சுப்போம்.

சுத்தசன்மார்க்கம் என்கிற பயிரின் விதைகள் உலகெங்கும் பரவ

பதியெலாம் களிக்கப்
வானத்துலிருக்கற தேவர்கள், முனிவர்கள் போன்ற கடவுளர்கள் எல்லாரும் மகிழ்ச்சியுற

பாடுகின் றேன்பொதுப் பாட்டே!
நானும் இந்த பொதுப் பாட்ட பாடறேன். உலகத்துல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. சாப்பாட்டுல, உடைகள்ல, மொழிகள்லேன்னு. இல்லியா? ஆனா உலகம் முழுக்க பொதுவான ஒன்னு இருக்கு தெரியுமா? அதுதான் கடவுள்னு நாம கூப்பிடற பரம்பொருள். எல்லாருக்கும் பொதுவானவனப் பத்திப் பாடப் பாடற அத்தனை பாடல்களும் பொதுப் பாட்டுகள் தான். அதத்தான் சொல்றார் வள்ளலார். ஈடு இணையிலாத பரம்பொருளே உன்னைப் பற்றி நானும் பாடுவேன் பொதுப் பாட்டேன்னு!

2. இது தேவையா?

வெட்டித்தனமா செய்திவிமர்சனங்கள் மட்டும் செய்துவந்த எனக்கும் ஒரு பேராசை, பொருந்தா ஆசை ஏற்பட்டது. என்ன அந்த ஆசை என்றால் எனக்கு பிடித்த, கொஞ்சமாய் பரிச்சயமான பாடல்களுக்கு ரொம்பவும் தீய்ந்த தமிழிலெல்லாம் விளக்கம் சொல்லாமல், எளிய கிட்டத்தட்ட பேச்சுத்தமிழில் விளக்கம், அல்லது எனக்கு அப்பாடலிலிருந்து என்ன புரிந்தது என்று சக பதிவாளர்களுக்கும் தெரியும் வகையில் எழுதலாமே என்பது அது. இவன் என்னவோ புதிதாக வீனஸிலிருக்கற மொழியில் ஏதோ எழுதிவிட்டு, சும்மா இல்லாம இதை தமிழ்னு வேற கதை விடறானேன்னு படிக்கறவங்க டென்சன் ஆகாம எழுதுவதே நோக்கம். நான் தமிழ் அறிஞனுமல்ல. மாணவனுமல்ல. சொல்லப் போனால் தமிழைக் இதுவரைக் கற்காமல், இப்போதுதான் தமிழென்பது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆவலில் புறப்பட்டிருப்பவன்.

மேலும், இத்தகைய ஒருவன் என்ன தைரியத்தில் மற்றவர்களுக்கு தீந்தமிழ் பாக்களுக்கு விளக்கமளிக்க வந்திருக்கானென்று தாங்கள் கேட்குமுன் நானே விடையளித்துவிடுகிறேன். உங்களுக்கு புரியும் வகையில் சொல்வது மட்டுமே என் நோக்கமல்ல. மாறாய், எனக்கு நானே பழந்தமிழின் சுவையை உணர்ந்து கொள்ள ஒருவகைத் தேடலே இப்பதிவு. அத்தகைய தேடலில் எனக்கு புரிந்ததை, என்னைப் போலவே என் அஞ்ஞான நிலையிலேயே இருப்போரிடம் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. (ஆஹா! தேடல் அப்டி இப்டியெல்லாம் வார்த்தை ஜாலம் போட்டு சாஹித்ய அகாடமி ரேஞ்சுக்கு போயிட்டடா இராமநாதா!) இப்படியெல்லாம் சொல்லும் போதே இவன் சொல்லும் விளக்கங்களில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் என்பது விளங்கியிருக்குமே?

அந்த மாதிரி தப்பு இருந்தா நாலு உதை கொடுத்து என்னை திருத்தவேண்டியது உங்களோட வேலை. மேலும், நான் மட்டுமே கிறுக்கிக் கொண்டிருக்காம, நீங்களும் கலந்து கட்டி அவியல் தயார் செய்யலாம். எப்படி? படிச்சுட்டு.. ஆமா/இல்ல, புடிச்சுது/தாங்க முடியல சாமி, அடி வாங்க ஆசையா/இல்லியா, நன்னி/நன்றினு நிறுத்திடாம, உங்களுக்கு என்ன தோணுதுனும் எழுதுங்க.

இதைப் பத்திதான் எழுதணும்னு இன்னும் தீர்க்கமா முடிவு பண்ணல. இப்போதைக்கு கொஞ்மா கந்தர் அநுபூதியும் ரொம்ப கொஞ்சமா திருவருட்பா எடுத்து உளறலாம்னு ஆசை. பார்ப்போம்.

இப்பதிவைக் கண்டு நொந்து போனீர்களானால், இம்முயற்சியை நான் துவக்கக் காரணமாயிருந்த இராகவன், ஆன்மிக சூப்பு, ஞானவெட்டியான் ஐயா, தி.இரா.ச மற்றும் ஜோசப் சாருக்கு உங்களின் அழுகிய தக்காளிகளையும், முட்டைகளையும் பார்சல் அனுப்புமாறு வேண்டுகிறேன். இத்தகைய சூரியன்களைப் போல நான் ஒருநாளும் ஆக முடியாது. ஆனாலும் என் சிறிய இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு இந்நெடிய பயணத்தைத் தொடங்குகிறேன். ஒரு நிலாவாகவாவது ஆவேனோ? அல்லது எரிந்து சாம்பலாய்த்தான் போவேனோ?

எதுவாகினும் தாமிருக்க பயமேன் என்று கைகாட்டும் கந்தனை என் வழிகாட்டியாய் நம்பி...

பிரியத்துடன்,
இராமநாதன்