Tuesday, August 08, 2006

10. மாயை மடியத் தொட்டான் முருகன்!

கார்மாமிசை காலன் வரிற்கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே! (10)

//தார் மார்ப வலாரி தலாரியெனும் சூர்மா மடியத் தொடு வேலவனே//

தார் மார்ப - தார் என்றால் மாலை. அழகிய மாலை அணிந்த மார்பை உடையவா. வலாரி என்பது இந்திரன். வலாசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு வலாரி என்ற பெயர் உண்டு. சூரபத்மன் இந்திரனுடைய பட்டணத்தைக் கொண்டவன். அதனால் அவன் வலாரியின் தலாரி (தலத்திற்கு). சூரபத்மன் நின்றது மா மர வடிவத்தில். மா வடிவத்தில் உயர்ந்து நின்ற இந்திர லோகத்தை அழித்த சூரனை..

மடியத் தொடு வேலவனே - முருகன் வேலால் அடித்தானா? அவனுடைய ஞானவேல் தொட்டவுடன் ஆணவ மலம் தூளாகி மடிந்தது. அடிக்க வேண்டியிருக்கவில்லை. வேலால் மெதுவாய்த் தொட்டான் முருகன். அதில் அழிந்தவன் சூரனா? இல்லை. சூரன் நற்கதியடைந்து முருகனின் அருகிலேயே என்றென்றும் நிற்கும் அருள் பெற்றான். அழிந்தது அவனின் ஆணவமே. இதைதான் நினைவில் கொள்ளவேண்டும். அவனை துதித்தால் நம்மை காத்து கெடுநிலையிலிருந்து ஏற்றுபவன் கந்தன். நம்மை அழிப்பவன் அல்ல. நம் பாவங்களும், அறியாமையும் தான் அவனைக் கண்டு பயப்படும். நாம் பயப்படத் தேவையில்லை. பக்தி செய்தாலே போதும். எத்தகைய தீய கதியிலிருந்தும் நம்மைக் காத்து தன்னருகிலேயே வைத்துக் கொள்பவன் அவன்.

//கார்மா மிசை காலன் வரின் கலபத்தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்//

கார் என்றால் கரிய. கார்மேகம் என்று சொல்கிறோம் இல்லையா? மா என்றால் பெரிய மிருகம். கரிய பெரிய மிருகமான எருமை மீதேறி உயிரை எடுப்பவன் காலன். அவன் சத்தியசீலன். தர்மத்திற்கு நிஜமான தலைவன். நமக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்தால் அழைத்துச் செல்லவேண்டியது காலனின் கடமை. அதுதான் அவன் தர்மம். அவனைக் கொடியவன் என்றோ அவனிடமிருந்து நம்மைக் காத்திடு என்றோ யாரும் சொல்வதில்லை. (மார்க்கண்டேயர் கதை வேறு, அது இங்கே வேண்டாம்). பொதுவாக காலனிடமிருந்து காத்திடு என்றால் மரணபயத்திலிருந்து நம்மைக் காத்திடு என்றுதான் பொருள். மரணபயம் என்பது எல்லாருக்கும் இருப்பது. என்னைக் கேட்டால் இருப்பது நல்லதுதான். என்னடா இப்படி சொல்லுகிறேனே என்று டென்ஷன் ஆகவேண்டாம்.

இந்த பிறவியில் நல்ல மனிதப் பிறப்பாய் நோய் நொடியின்றி, ஆரோக்கியமான சவுகரியமான வாழ்வை பெற்ற நமக்கு அடுத்த ஜென்மம் என்று இருப்பின் அதில் எதுவாகப் பிறப்போமோ என்று பயம் இருக்கவேண்டாமா? இப்போதைய சுகமான மனித வாழ்க்கையாய் இல்லாமல் தினந்தோறும் மற்ற விலங்குகளுக்கு பயந்தோடிக் கொண்டிருக்கும் மானாகவோ, முயலாகவோ பிறக்க நேர்ந்தால்? இந்த நற்பிறவியிலேயே ஆண்டவனை ஒரு நொடி கூட நினைக்காத மனம், அப்போது மட்டும் நினைக்குமா? அதனால் மரணபயம் என்பது இந்தப் பிறவியிலேயே முருகனை அடைய இன்னும் சிரத்தையுடன் நாம் முயற்சி செய்ய உதவுமானால் இருப்பதில் தவறே இல்லை அல்லவா?

பாடலில் சொல்வது கரிய எருமையில் காலன் என்னை அழைத்துப்போக வருகையில், கலபத்தேர் - அழகான மயில் வாகனத்தில் நீ என்னெதிரில் தோன்றி ஆட்கொள்ளவேண்டும் என்று பாடுகிறார் அருணகிரி. அவருக்கு காரியசித்தி ஆகிவிட்டது. நமக்கு? தினமும் பாடிப் பிரார்த்தனை செய்யவேண்டிய பாடல்களில் ஒன்று இது.

14 comments:

said...

கந்தா கந்தா என்றால் இந்தா இந்தா என வாரிவழங்கம் வள்ளல் நன்றாக எழுதியுள்ளீர்கள்

said...

அருமை ராமநாதன். மிக அருமை.

பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

"முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே"

அதே போல தொடு வேலவனே படித்ததும் நினைவிற்கு வரும் வரிகள்.

"வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடி வேலவா
அங்கு வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது
வேலவா வடி வேலவா"

said...

அருமை.

:-)

said...

என்னார், ஜிரா
மிக்க நன்றி

said...

நன்மனம்,
நன்றி.

அது என்ன சிரிப்பான்?? :)) (ரெண்டா போட்டுக்கறேன்)

said...

//அது என்ன சிரிப்பான்?? :)) (ரெண்டா போட்டுக்கறேன்)//

ஒன்னு கொடுத்தா, கேக்காமலேயே ரெண்டா திரும்பி வருது பாத்தீங்களா! அதுக்கு தான்.

:-)

said...

ஏற்கனவே எப்போதோ என் பதிவில் இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதிப் பழகிக்கிட்டீங்க போலிருக்கே.... உங்களுக்கு நினைவிருக்கா? :-)

'வலாரி தலாரி எனும் சூர் மா' - இதற்கு பொருள் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் இராமநாதன்.

said...

நன்மனம்,
பரவாயில்லயே.. பின்னூட்ட கலை வளர்ப்பு விதிகள்லாம் நல்லாவே வேலை செய்யுது. என்ன செஞ்சு என்ன. அறுநூறு எழுநூறா என்ன? :P

அதுக்காக புகை கிளம்புவதாக யாரும் அவதூறு பரப்ப வேண்டாம். சிரிப்பான் மூணா போட்டுக்கறேன். :) :) :)

said...

குமரன்,
நினைவில்லாம என்ன.. நீங்க அடிச்ச லூட்டிய மறக்க முடியுமா? :))

நன்றி

said...

நன்றகச்சொன்னீர்கள் ராமனாதன். மரணபயம் வேண்டும் என்று.அதனால்தான் மனிதன் ஓரளவுக்கு கட்டுக்குள் அடங்கி இருக்கிறான். ஆனால் மரண பயத்தைவிட கொடியது ஜனன பயம். அதை தவிற்கவேண்டும் என்றால் முருகனது சரணகமலாலயத்தை அரை நிமிழமாவது பற்றினால் போதும் என்று அருணகிரியார் கூறுகிறார் அந்த அரை நிமிழம் என்பது எவ்வளவு பெரிய விஷ்யம் என்பது போய்ப்பார்த்தால்தான் தெரியும். மீண்டும் உங்களுடன் சந்திப்பதில் மகிழ்ச்ச்சி அடைகிறேன்.

said...

நன்றி தி. இரா. ச,

டி.எஸ்.பி சாஸ்திரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இறப்பதற்கு பயப்படுபவர்கள் உண்மையில் பிறக்கத்தான் பயப்பட வேண்டுமென்று.

said...
This comment has been removed by a blog administrator.
said...

மிக்க நன்றி எஸ்.கே.

said...

'சூர் மடியத் தொடு வேலவனே' என்று சொல்லாமல், "சூர்மா" எனச் சொல்லியதில் உள்ள அழகினை நன்கு சொல்லியிருக்கிறீர்கள்!

சூரன் அழியவில்லை; அவன் ஆணவமாக உருக்கொண்டு நின்ற மாமரத்தை இரண்டாகப்பிளக்க வேலைத் தொடுத்தவன் மயிலேறிய மாணிக்கம்!

நல்ல பாடலுக்கு ஏற்ற நல்லதொரு விளக்கம்! நன்றி!

[எ.பி. திருத்தியது!!]