Monday, January 30, 2006

4. பிறத்தமை தீங்குசொல்லாத் தெளிவும்!

தமிழ்மணத்தில் நிலவும் பிரச்சனைக்கும் வள்ளலார் அழகா இந்தப் பாட்டில் ஒரு வரி சொல்லிருக்கார்.

ஆகவே எனக்கு மிகவும் திருவருட்பாக்களில் ஒன்றை குமரனின் பதிவில் சொன்னது போல, அருமையான கருத்துகளை உள்ளடக்கிய இப்பாடலை வலையேற்றியிருக்கிறேன்.

பாடியது: விஜய் சிவா

கேட்க

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்உலகில்

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)
தீங்குசொல் லாத்தெளிவும்

திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்

தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!

கேட்டுப்பாருங்கள்.

---
கேட்பதில் சிக்கல் ஏதும் இருப்பின் [?].
----


என்னென்ன வேண்டும்

//ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்//

ஒரு பொருளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று நான் யாதொருவரிடமும் போய் "ஈ" (யாசகமாக கொடு) என்று மன்றாடக்கூடிய நிலையும், அப்படிக் கேட்பதையே என் இயல்பாக கொள்ளாமையும்

//என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//

என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்

//இறையாம் நீஎன்றும் எனைவிடா நிலையும்//

யாவர்க்கும் இறைவனான நீ என்னை மறவாமல், எந்நேரமும் என்னருகில் இருந்து அருளக் கூடிய உன்னத நிலையும்

//நான் என்றும்உள நினைவிடா நெறியும்//

நான் ஒரு நொடிகூட உள்ளத்தால் உன்னை மறவாமல், எந்நேரமும் உன்னையே சிந்தையில் வைத்து போற்றிப் பாடக் கூடிய பக்தி நெறியும்

//அயலார் நிதிஒன்றும் நயவாத மனமும் //

அடுத்தவர்களின் பொருள் மீது பேராசைப் பட்டு, அதனை கவர வேண்டாம். அதனை திருட வேண்டும் என்ற எண்ணம் கூட வாராத நல்ல மனமும்

//மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//

மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்

//உலகில்சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத் (பிறத்தமைன்னும் அர்த்தம் கொள்ளலாமே!)தீங்குசொல் லாத்தெளிவும்//

அடுத்தவரை சீ, பேய், நாய் என்று இகழ்சொற்களால் தூற்றாமல் இருக்கக்கூடிய தெளிவான, அன்பான சிந்தனையும்இதில் பிறத்தமை என்று அர்த்தம் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதென் கருத்து.ஒருவரின் பிறப்பைக் கொண்டு அவரை வன்சொற்களால் இகழாத அன்பான சிந்தனையும்

//திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//

உறுதியாய் இவையெல்லாவற்றையும், அவற்றுடன் கூட முக்கியமாக சத்தியத்தையே என்றும் பேசும் தன்மையும், உடற்தூய்மையுடன் சேர்த்து மனத்தூய்மையும் எனக்கு அருளிச்செய்து, உன் அழகிய தெய்வீகத் திருவடிகளை அடையக் கூடிய தகுதியை உடையவனாக என்னை செய்வாய்!யார் இவையெல்லாம் தந்தருள வேண்டும்?

//தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே//

சென்னையிலிருக்கும் கந்தக்கோட்டத்தமெனும் போற்றப்படற்குரிய(வளர்) தலத்தில் அனைவரும் புகழ, என் தாயின் ஸ்தானத்தில் நிற்கும் கந்தவேளே!

//தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே!//

தனக்குள்ளேயே எல்லாமுமாய் நிற்கும் மணியே!உன்னையே நினைத்து, தம்முள் இழுத்து, நிறுத்தியிருப்போர்க்கு முடிவில்லாமல் அருளும் சைவ மணியே!ஆறுமுகத்தை உடைய என் தெய்வமணியே!

11 comments:

said...

மிக அருமையான பாடல். தங்களின் விளக்கங்களும் தெளிவாக உள்ளன.

said...

மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா..

தவறிருப்பின் தயவு செயுது சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

said...

இராமநாதன், மிகவும் அருமையாக வந்திருக்கிறது. முதல் முயற்சியே சிறப்பாக அமைந்தமைக்கு எனது வாழ்த்துகள்.

said...

rams,

can you change your explanation with more friendly (manippiravaalam) and with a touch of comedy..

I dont mean it is not good now, this is just a suggession..

Sorry for englipeech.

said...

ஜிரா,
நன்றி

said...

பெனாத்தலாரே,

இப்பத்தானே கொ.ப.சே ஆரமிச்சிருக்கேன். இந்த மாதிரி விளக்கம் சொல்றதெல்லாம் நமக்கு ரொம்ப புதுசு.

நீங்க சொல்றா காமெடியும் கலந்து எழுதினா இன்னும் நிறைய பேரச் சென்றடையும். சந்தேகமில்லை. கண்டிப்பா முயற்சி செய்யறேன்.

மணிப்பிரவாளம் சரியா வருமான்னு தெரியல. பேச்சுத்தமிழ்லேயே தொடருவது நல்லதுன்னு எனக்கு தோணுது.

நன்றி.

said...

இராம்ஸ். மேல ரெண்டு மூனு பேரு சொல்லிட்டாங்க. அதனையே நானும் வழி மொழிகிறேன். உங்க கிட்ட இந்த விளக்கத்தை வெளிய கொண்டு வர நான் பட்ட கஷ்டம் எனக்குத் தானத் தெரியும் :-) விளக்கம் சொல்லுங்கன்னவுடனே என்ன அற்புதமா சொல்லியிருக்கீங்க. இத ஆரம்பத்துலேயே செஞ்சிருந்தா நான் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தியிருக்கத் தேவையில்லையில்ல? ஒரு தடவைக்கு நூறு தடவை வேற சொல்லவச்சீங்களே... :-)

said...

சரி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அடிசனல் எண்ணங்கள்...

////என் னிடம்ஒருவர்ஈ திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்//

என்னிடம் ஒருவர் வந்து ஒரு பொருளை தானமாக தந்துதவுங்கள் என்று கேட்கும்போது அவர் கேட்பதை மறுக்காமல், கேட்கும் பொருளை அளித்துதுதவ வேண்டும் என்று நிலைதவறாத, உறுதியான கொள்கையும்
//

உறுதியான கொள்கை மட்டுமன்று. கொடுக்கணும்ங்கற எண்ணம் மட்டும் இருந்தா முடியுமா? அதுக்குரிய வக்கு இருக்க வேணாம்? அதைத் தான் கேக்கிறார். என்கிட்ட அவங்க கேக்குறதைக் குடுக்கக் கூடிய வக்கும் வேணும்ன்னு.

said...

////மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்//

மெய்யானாதான உனை அடையும் வழியிலிருந்து என்றென்றும் பிறழாமல், மனம் தளராமல் இருக்கக்கூடிய உறுதியும்
//

இது சிறப்பான விளக்கம். இன்னொன்னும் இங்க சொல்லலாம். உண்மையை எந்த நிலையிலும் சொல்லி எத்தனைத் துன்பம் வந்தாலும் அரிச்சந்திரம் போல் என்றும் நெகிழாத திடமும் கேக்குறார்.

said...

////திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்//

உறுதியாய் இவையெல்லாவற்றையும்//

திரம் என்பது ஸ்திரம் என்ற வடமொழிச் சொல் எனக்கொண்டு நன்றாய் விளக்கம் தந்திருக்கிறீர்கள். நல்ல விளக்கம்.

அம்புட்டுத் தான். தொடர்ந்து எழுதுங்கப்பு. நாங்களும் வந்து தொடர்ந்து தொந்தரவு பண்றோம்.

said...

சூப்பு,
//ஒரு தடவைக்கு நூறு தடவை வேற சொல்லவச்சீங்களே//

அந்த சூப்புன்னா நூறுதடவை சொல்லவேணாம். ஆனா நீர்?? :))

//என்கிட்ட அவங்க கேக்குறதைக் குடுக்கக் கூடிய வக்கும் வேணும்ன்னு.
//
இதுவும் சரிதான். ஆனால், பொருள் வேண்டுமென்று கேட்கும் தொனியில் இருப்பதான் அதை விட்டுவிட்டேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதை மறுக்க முடியாது.

//உண்மையை எந்த நிலையிலும் சொல்லி எத்தனைத் துன்பம் வந்தாலும் அரிச்சந்திரம் போல் என்றும் நெகிழாத திடமும் கேக்குறார்.
//
ஹூம். சரியாத்தான் இருக்குது. எல்லாத்துக்கும் ஒரு alt விளக்கம் வச்சிருக்கீரே.

//திரம் ஸ்திரம்//
திரமென்றால் தமிழிலும் உறுதியென்று தான் பொருள் வரும் என்று நினைத்திருந்தேனே? இல்லையா?

//நாங்களும் வந்து தொடர்ந்து தொந்தரவு பண்றோம்.
//
வருக வருக.

நன்றி நன்றி நன்றி!